Last Updated:
அகமதாபாத்தில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 20 மாணவர்கள் காயமடைந்தனர், 11 பேர் வீடு திரும்பினர். 4 மருத்துவ மாணவர்கள் மற்றும் 4 உறவினர்கள் உயிரிழந்தனர்.
அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதியதில், 4 மருத்துவ மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக, இளநிலை மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.
இந்நிலையில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவு அருந்திக் கொண்டு இருந்த 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், அதில் 11 பேர் உடல்நலம் அடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, விடுதி வளாகத்திற்குள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களின் குடியிருப்பில், மருத்துவர்களின் உறவினர்கள் 4 பேர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
படுகாயம் அடைந்த மருத்துவரின் மனைவி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ahmedabad (Ahmedabad) [Ahmedabad],Ahmedabad,Gujarat
June 14, 2025 7:49 PM IST
அகமதாபாத் விமான விபத்து : மருத்துவக் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவர்கள் எவ்வளவு பேர்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு


