Last Updated:
3 முறை கொலைத் திட்டம் தீட்டிய நிலையில், 4ஆவது முறைதான் ராஜாவைக் கொலை செய்ய முடிந்ததாக மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ராஜா ரகுவன்ஷி – சோனம் ஆகியோர் தேனிலவுக்காக கடந்த 20 ஆம் தேதி மேகாலயாவுக்குச் சென்ற நிலையில், ராஜா ரகுவன்ஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் கைதான மனைவி சோனமிடம் நடத்திய விசாரணையில், தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மூலம் கணவரைத் தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ராஜா ரகுவன்ஷியும் சோனமும் தேனிலவுக்காக பெங்களூருவில் இருந்து மேகாலயாவிற்குப் புறப்பட்டபோது, கூலிப்படையினர் புதுமணத் தம்பதியைப் பின்தொடர்ந்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா, இந்தூரிலேயே தங்கிவிட்டார்.
கடந்த 23 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியும் சோனமும் நோங்கிரியாட் பகுதிக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு புதுமணத் தம்பதி தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே கூலிப்படையினரும் தனியாக வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளனர். பின்னர் அங்குள்ள அருவியைச் சுற்றிப் பார்க்கப் புதுமணத் தம்பதியினர் சென்றனர். அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றார். தனிமையில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று கூறி அந்தச் சுற்றுலா வழிகாட்டியை சோனம் திருப்பி அனுப்பியுள்ளார். பின்னர் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறி மலை உச்சிக்கு கணவர் ராஜா ரகுவன்ஷியை, சோனம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது கூலிப்படையைச் சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் பின்தொடர்ந்து வந்து ராஜா ரகுவன்ஷியை கொடூரமான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தனர். கூலிப்படையினருடன் சோனமும் இணைந்து ராஜா ரகுவன்ஷி உடலை சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு, இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பியுள்ளனர். ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ய 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக சோனம் வாக்குறுதி அளித்திருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் நோங்கிரியாட்டில் உள்ள சுற்றுலாத் தலத்திற்குச் செல்வதற்காக முன்பாகப் புதுமணத் தம்பதியினர் சோரா (sohra) பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்குவதற்கு அறை கிடைக்காததால், தங்களது சூட்கேஸை அங்கேயே வைத்துவிட்டு நோங்கிரியாட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது சோனம் தனது தாலி மற்றும் மோதிரத்தை சூட்கேஸிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். புதுமணப் பெண் சூட்கேஸில் தாலியைக் கழற்றி வைத்துவிட்டுச் சென்றதும், சுற்றுலா வழிகாட்டியின் வாக்குமூலமும் இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை நடத்திய தொடர் விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, திருமணம் உறுதியானது முதலே ராஜாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக அந்தக் கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளது.
3 முறை கொலைத் திட்டம் தீட்டிய நிலையில், 4ஆவது முறைதான் ராஜாவைக் கொலை செய்ய முடிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் கொலைக்குப் பின்னர் சோனத்தை எப்படித் தப்பிக்க வைப்பது என்பதற்கும் தனியாகத் திட்டம் தீட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆற்று நீரில் சோனம் அடித்துச் செல்லப்பட்டதாக நாடகம் நடத்தலாமா அல்லது வேறு ஒரு பெண்ணைக் கொலை செய்து எரித்துவிட்டு அதனை சோனம் என நம்ப வைக்கலாமா என யோசனை செய்ததாகவும் திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளனர்.
June 14, 2025 10:14 PM IST


