“பவுமா மிகச்சிறப்பான கேப்டன். அவரைப் பற்றி மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” இவ்வாறு பவுமாவை புகழ்ந்தவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குயின்டன் டி காக். அவர் எந்த சமயத்தில் அப்படி சொன்னார் என்பது முக்கியமானது. 2021-ம் ஆண்டு டி20 உலக கோப்பையின்போது ‘Black lives Matter’ விவகாரம் உலகம் முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் மண்டியிட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
அதன்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கமும் தனது அணி வீரர்களுக்கு இதனை கட்டாயமாக்கியது. அப்போதைய கேப்டன் குயின்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியிட மறுத்தார். தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்தும் அவர் விலகினார். அப்போது தான் பவுமா டி20 கேப்டனாக தலைமையேற்றார். இந்த சர்ச்சையை மிகவும் நிதானமாக அணுகிய பவுமா பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததோடு, டி காக்கை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்தார். இதில் பவுமாவின் தலைமை பண்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

அவரது தலைமை பண்புக்கான அங்கீகாரமாக அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார் பவுமா. அன்றிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் முழு நேர கேப்டனாக செயல்பட்டு வலுவான அணியை உருவாக்கி காட்டினார்.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென் ஆப்ரிக்கா அணி பெரிய அளவில் மாற்றங்களுக்கு உட்பட்டது. புதிய அணியை உருவாக்கும் பெரிய சவால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கும், கேப்டனுக்கும் இருந்தது. இந்த சவாலை சரியாக செய்து முடித்துள்ளார் கேப்டன் பவுமா.
தென்னாப்பிரிக்க அணியில் பூர்வக்குடி கருப்பினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் கருப்பினத்தை சேர்ந்தவர் கேப்டனாக வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. அதற்காகவும், தன்னுடைய உயரம் காரணமாகவும், நிற, இன, உடலமைப்பால் தொடர்ந்து ட்ரால் செய்யப்பட்டவர் பவுமா. அதையெல்லாம் உடைத்து இன்று வரலாறு படைத்திருக்கிறார். அதற்கு காரணம் தன் மீதான இப்படியான விமர்சனங்கள் குறித்து கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கேப்டன்ஷிப்பில் கவனம் செலுத்தியது தான்.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை, கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை. இன்று அந்த ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அதனை நிகழ்த்தி காட்டியதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்கு முக்கியமானது.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார் பவுமா. அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார். தனது பேட்டிங் குறித்த விமர்சனங்களையும் எதிர்கொண்டே வந்திருக்கிறார்.
2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார் பவுமா. ஆனால், இன்று அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 27 ஆண்டுகால கனவை நனவாக்கியிருக்கிறார் பவுமா. அவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
June 14, 2025 7:52 PM IST

