பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது. அம்மாநிலத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை(ஜூன் 15) நள்ளிரவுமுதல் அமலாகிறது.
நாடெங்கிலும் பைக் டாக்ஸி சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம்(ஏ.என்.ஐ. டெக்னாலஜீஸ் பிரைவே லிமிடட்), ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடட், ரோப்பென் ட்ரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடட்(ரேபிடோ) மற்றும் பிற நிறுவனங்களால், கர்நாடகத்தில் ஏற்கெனவே ஒரு தனி நீதிபதியால் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கர்நாடகத்தில் அனைத்து பைக் டாக்ஸி சேவைகளையும் 9 வாரங்களுக்குள் நிறுத்த நீதிபதி பி. ஷ்யாம் பிரசாத் உத்தரவிட்டிருந்தார். இதற்கான கடைசி தேதி ஜூன் 15-ஆக நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு அரசு கொள்கை வகுக்க 3 வாரங்களுக்குள் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இவ்விவகாரத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க அரசு தரப்பில் முனைப்பு காட்டுவதால் கொள்கை வகுக்கப்படவில்லை. இதனால் பைக் டாக்ஸி இயங்க சிக்கல் ஏற்பட்டுள்ளது.

