Last Updated:
தென்னாப்பிரிக்கா 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐசிசி கோப்பை வென்று வரலாறு படைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் தோற்கடித்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. விறுவிறுப்பாக நடந்த 3 ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 202 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா வீரர்களில், ரியான் ரிக்கில்டன் 6 ரன்களிலும், வியான் முல்டர் 27 ரன்களிலும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் நங்கூரமிட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் வீசிய பந்தை பதம் பார்த்தனர். பொறுப்புடன் ஆடி வரும் மார்க்ரம் 156 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், கேப்டன் பவுமாவும் அரைசதம் கடந்தார்.
3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்துள்ளது. மார்க்ரம் 102 ரன்களுடனும், பவுமா 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரைக் கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடந்திருக்கிறது.
4ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில் 4 ரன்கள் சேர்ப்பதற்குள் பவுமா தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8 ரன்களிலும், மார்க்ரம் 136 ரன்களுக்கும் அவுட் ஆகியதால் 5 விக்கெட் சரிந்தது. எனினும் டேவிட் பெடிங்ஹாம் மற்றும் கைல் வெர்ரெய்ன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 83.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்கா வெல்லும் முதல் ஐசிசி கோப்பை இதுவாகும். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் 27 ஆண்டுகால சோகம் முடிவுக்கு வந்திருக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 14, 2025 5:29 PM IST

