ஆமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் இருந்த ஒரேயொருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.
விபத்துக்குள்ளான விமானத்தில் இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர், கனடாவை சேர்ந்த ஒரு பயணி மற்றும் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியின் மீது விமானம் விழுந்ததில் அங்கிருந்த மருத்துவ மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்த நிலையில் அவரும் உயிரிழந்தார். காயமடைந்த ஒரு பயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானி அறை குரல் பதிவு கருவியைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானம் விழுந்ததில் சேதமடைந்த விடுதியில் பலா் தங்கியிருந்த நிலையில், அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டட வளாகத்தில் இருந்த 5 மருத்துவ மாணவர்களும் ஒரு மருத்துவர் மற்றும் இன்னொரு மருத்துவரின் மனைவி உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்ததது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரபூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

