Last Updated:
தற்போது வரை ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 66 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு அருமையாக ஒத்துழைத்து வருகிறது. 212 ரன்கள் குறைவானதாகக் கருதப்பட்ட நிலையில், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி தென்னாப்பிரிக்க அணிக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
57.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பெடிங்கம் 45 ரன்களும் கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைக்கே இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியிருப்பதால் நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் மேட்ச் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
June 12, 2025 7:49 PM IST


