Last Updated:
147.3 கி.மீ வேகத்தில் பந்து வீசி பிரணவ் ராகவேந்திரா அனைவரையும் கவர்ந்துள்ளார்.
வேலூரைச் சேர்ந்த 17 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆர்.டி. பிரணவ் ராகவேந்திரா தான் தற்போது இந்திய கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளார்.
பிசிசிஐ-யின் பெங்களூரு சிறப்பு மையத்தில் பிரணவ் ராகவேந்திரா 147.3 கி.மீ வேகத்தில் பந்து வீசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.
முதலில் ஓட்டப்பந்தய வீரராக இருந்த பிரணவ், கிரிக்கெட்டின் பக்கம் தனது கவனத்தை மாற்றினார். மிகவும் வேகமாக பந்து வீச வேண்டும் எனக் கூறும் அவர், பேட்ஸ்மேனுக்கு பவுன்சர்கள் வீசி அவர்களை பயமுறுத்த வேண்டும், சரியான லைனில் வீச வேண்டும் எனக் கூறுகிறார்.
மேலும் வேகமாக பந்து வீச வேண்டும் என்பதால், உடலை சரியாக வைத்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் U-19 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என பிரணவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்-யிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட பிரணவ், 16 வயதிலேயே 139 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இன்னும் சில நாட்களில், அவரது வேகம் 150 கி.மீ-யைத் தாண்டும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
எம்.ஆர்.எஃப் பேஸ் பவுண்டேஷனின் தலைமை பயிற்சியாளர் செந்தில்நாதன் கூறும்போது, “பிரணவிற்கு வேகம் மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது. 130 கி.மீ என்று அவரிடம் இருந்த வேகம், இரண்டு ஆண்டுகளில் 145 கி.மீ ஆக உயர்ந்துள்ளது. அவருக்கு வேகப்பந்து வீச்சு இயற்கையாக வருகிறது. ஆனால் அதை அவர் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம்.
இந்த வயதில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். அவரை இன்னும் தயார் படுத்த வேண்டும். வேகத்தை விடவும் அதைக் கட்டுப்படுத்துவது முக்கியம். அதை அவரும் நன்கு உணர்ந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
பிரணவ் இதுவரை 2 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளிலும், டிஎன்பிஎல்-யில் திருப்பூர் அணியிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
June 12, 2025 12:23 PM IST


