இந்தக் கணக்கெடுப்பு, முதன்மையாக 25–54 வயதிற்குள் இருக்கும் தனியார் துறை ஊழியர்களிடம் நடத்தப்பட்டது. ஓய்வூதியத் திட்டமிடல், ஓய்வூதிய எதிர்பார்ப்புகள் மற்றும் நிதி விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கேள்விகள் இந்தக் கணக்கெடுப்பில் கேட்கப்பட்டன.
முன்கூட்டியே ஓய்வு பெறுதல்; ஆனால் குறைந்த சேமிப்பு
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 25 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்களில் 43 சதவீதம் பேர், வழக்கமான ஓய்வூதிய வயதைவிட மிகவும் முன்னதாக, அதாவது 45 முதல் 55 வயதுக்குள் ஓய்வு பெற விரும்புகிறார்கள். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 74 சதவீதம் பேர் தங்கள் மாதச் சம்பளத்தில் 1 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஓய்வூதியச் சேமிப்பில் பங்களிப்பதாகக் கூறினர்.
“எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய வயதுக்கும் நிதிப் பங்களிப்பு முறைகளுக்கும் இடையே தெளிவான பொருத்தமின்மை உள்ளது” என்று இந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது. உயர்வான லட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்றவாறு விவேகமாக முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரிடமும் இதைப் பார்க்க முடியவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
அதிக ஓய்வூதிய எதிர்பார்ப்புகள்; குறைவான நம்பிக்கை
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சத்திற்கு மேல் ஓய்வூதியம் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தாலும், 11 சதவீதம் பேர் மட்டுமே தங்களது முதலீடுகள் அதற்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். “இந்த அப்பட்டமான ஏற்றத்தாழ்வு ஓய்வூதியத் தயார்நிலைக்கும் முதலீட்டுக்கும் இடையே நிலவும் இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது” என்று கணக்கெடுப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதில் பங்கேற்றவர்களில் 3.65 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் ஓய்வூதியத் திட்டங்கள் ஓய்வுக்குப் பிறகு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று “மிகவும் நம்பிக்கையுடன்” இருப்பதாகக் கூறினர். அதே நேரத்தில் 42 சதவீதம் பேர் “நம்பிக்கை இல்லை” என்று கூறினர்.
பாரம்பரியத் திட்டங்களைச் சார்ந்திருத்தல்
கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலான நபர்கள் பாரம்பரிய ஓய்வூதியத் திட்டங்களையே பெரிதும் நம்பியுள்ளனர். கிட்டத்தட்ட 83 சதவீதம் பேர் தங்கள் ஓய்வூதியத் திட்டமிடல், ஊழியர் வருங்கால வைப்பு நிதி, கிராஜுவிட்டி அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ளனர். ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை வழங்கக்கூடிய தனியார் வருடாந்திரத் திட்டங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதம் பேர் இதில் முதலீடு செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.
கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பாதிக்கும் மேற்பட்டோர், முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வருமானத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டம் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று ஒப்புக்கொண்டனர். இதற்கிடையில், 17 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் ஓய்வூதியக் கணக்கீடுகளை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாகக் கூறினர்.
என்ன மாற்றம் வேண்டும்?
நிதிக்கல்வி மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் சீர்திருத்தங்களின் அவசியத்தை இந்தச் சர்வே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. “ஸ்திரத் தன்மைக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, வருடாந்திரத் திட்டங்கள் போன்ற கூடுதல் உத்தரவாத வருமான வாய்ப்புகளை நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று இந்தக் கணக்கெடுப்பு கூறியுள்ளது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டமிடல் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
June 11, 2025 8:34 PM IST
இளம் இந்தியர்கள் சீக்கிரமாகவே ஓய்வு பெற விரும்புகிறார்கள்; ஆனால் சிலர் மட்டுமே நிதி ரீதியாக தயாராக உள்ளனர்: கணக்கெடுப்பில் தகவல்

