நாய், பூனை, மாடு என செல்லப்பிராணிகள் மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கின்றன. அதிலும், நாய் மற்றும் பூனை வளர்ப்பு சமீப காலமாக அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது. இவை மனிதர்களிடம் அரவணைப்பைத் தேடுவது போல், மனிதர்களும் செல்லப் பிராணிகளின் மீது உயிரையே வைக்கின்றனர். மேலும், தனது குடும்பத்தில் ஒருவராகவே அதனைப் பார்க்கின்றனர்.
ஆனால், இந்த அன்பான உயிர்களுக்கு எதிர்பாராத வகையில் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கான சிகிச்சை செலவுகள் கட்டுக்கடங்காததாக இருக்கின்றன. எனவே, இவற்றை நேர்த்தியாகக் கையாளும் வகையில், செல்லப்பிராணிகளுக்கும் காப்பீடுகள் வழக்கில் உள்ளன. இதன்மூலம், அதன் பராமரிப்புச் செலவு முதல் தேவையான சிகிச்சைகள் வரை அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஏனென்றால், “பெரும்பாலான நேரங்களில், செல்லப்பிராணியை வளர்ப்பவர்கள் அதற்குச் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை மற்றும் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை” என்று கால்நடை மருத்துவர் நமீதா நட்கர்னி தெரிவிக்கிறார்.
மருத்துவச் செலவுகள் – எதிர்பாராத சுமை
திடீரென ஏற்படும் அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் அல்லாமல், நீரிழிவு, மூட்டுவலி, புற்றுநோய் போன்ற நீடித்த சிகிச்சைகள் வரை மாதத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை செலவாகலாம். இன்னும் கூடுதலாக, பெரும்பான்மையான அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.80,000 வரை கூட செலவாக வாய்ப்புள்ளது. “இது செல்லப்பிராணியை வளர்ப்பவர்களை நிதிச் சுமையில் தள்ளவும் வாய்ப்புள்ளது” என்று நமீதா நட்கர்னி கூறுகிறார்.
நோய்களால் ஏற்படும் அபாயம்
புள்ளி விவரங்களின்படி, நான்கு அல்லது ஐந்து நாய்களில் ஒன்று, ஒரு கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடும். அதிலும், குறிப்பிட்ட சில இனங்களைச் சேர்ந்த நாய்கள் இடுப்பு செயலிழப்பு போன்ற மரபணு பிரச்சனைகளுக்கு ஆளாவதோடு, வயதான நாய்கள் பொதுவாக மூட்டுவலியை எதிர்கொள்வதும் அதிகமாகிறது.
நாய்களைப் போலவே பூனைகளும் சில சவால்களை எதிர்கொள்கின்றன. பூனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது பொதுவானதாக இருந்து, உணவுப் பழக்கங்கள் மற்றும் மருந்துகளால் நிரந்தர பராமரிப்பு தேவைப்படும் அளவுக்கு மாறுகிறது.
காப்பீடு – ஆடம்பரமா அல்லது பாதுகாப்பா?
சிலர் காப்பீட்டை ஆடம்பரமாகவே நினைக்கின்றனர். ஆனால், காப்பீடு என்பது சாத்தியமான செலவுகளைக் குறைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளும் பட்சத்தில், இது எதிர்பாராத செலவுகளை நிர்வகிக்க உதவும் ஒரு பாதுகாப்பு கவசமாகவே இருக்கிறது. பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்கள், செல்லப் பிராணிகளுக்கான காப்பீட்டுத் திட்டங்களை வழங்கினாலும், பெரும்பாலான செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
காப்பீடு உள்ளடக்கிய நன்மைகள்:
- அறுவை சிகிச்சை, நீடித்த சிகிச்சைகள்
- திருட்டு, காணாமல் போவது தொடர்பான பாதுகாப்பு
- இறுதிச் சடங்கு செலவுகள், கருணைக் கொலை (euthanasia) போன்றவற்றுக்கு நிதியுதவி
சிலருக்குத் திருப்பிச் செலுத்தும் உரிமை கோரல் முறைகளில் நேர்மறையான அனுபவங்களும் இருப்பதாக நமீதா நட்கர்னி கூறுகிறார்.
காப்பீடு செய்யப்படாதவை:
செல்லப் பிராணிகளுக்கான காப்பீடு என்பது சில முக்கியமான சிகிச்சைகள் மற்றும் செலவுகளை மட்டுமே உள்ளடக்கும். கீழ்கண்டவை பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்கப்படாமல் இருக்கலாம்:
- தடுப்பூசிகள் அல்லது தடுப்பூசி இல்லாததால் ஏற்படும் நோய்கள்
- தேர்வு செய்யும் சிகிச்சைகள்
- ஏற்கனவே உள்ள நோய்கள்
- பொது பராமரிப்பு செலவுகள்
- மருந்து கடைகளில் வாங்கும் OTC மருந்துகள்
- கருத்தடை சிகிச்சை
இந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்வது, உரிய காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு முக்கியமானதாகும்.
பணமில்லா சிகிச்சை
கால்நடை மருத்துவமனைகளில் பணமில்லா காப்பீடு இன்னும் பரவலாக அமல்படுத்தப்படவில்லை. பெரும்பாலான பயனாளர்கள், காப்பீட்டுத் தொகையைச் செலுத்தி, பின்னர் திரும்பப் பெறும் முறையையே பின்பற்ற வேண்டியிருக்கிறது.
அன்பும், நம்பிக்கையும் நிரம்பிய நமக்கு நெருக்கமான உறவுகளாக செல்லப்பிராணிகள் நம் வீட்டில் வாழ்கின்றன. ஆனால், அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படும் நேரங்களில், மருத்துவச் செலவுகள் நம்மைத் திணறடிக்கக்கூடும். எனவே, இதுபோன்ற செலவுகளை எதிர்கொள்ள முன்னதாகவே தயாராக இருக்க, காப்பீடு என்பது ஆடம்பரமல்ல, அவசியமான ஒன்றாகும்.
June 10, 2025 4:23 PM IST
செல்லப் பிராணிகளுக்கான காப்பீடு… ஆடம்பரமா அல்லது பாதுகாப்பா…? மருத்துவர் தரும் விளக்கம் இதோ…!

