Last Updated:
ராஜா குஷ்வாஹா என்பவரை சோனம் காதலித்து வந்ததும், ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்த பிறகும் அவருடன் தொலைபேசியில் பேசியதும் தெரியவந்தது.
கணவனை மேகாலாயாவிற்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கில் கைதான சோனம், தனக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், உத்தரப்பிரதேசத்தின் காசிபூருக்கு யாரோ அழைத்து வந்து விட்டதாகவும் காவல்துறையினரிடம் அப்பாவி போல் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ராஜா ரகுவன்ஷி – சோனம் ஆகியோர் தேனிலவுக்காக கடந்த 20 ஆம் தேதி மேகாலாயாவுக்குச் சென்றனர். அதன் பின்னர் இருவரும் காணவில்லை என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தம்பதி காணாமல் போன 10 நாட்களுக்குப் பிறகு கடந்த 2 ஆம் தேதி, அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சோனம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது காவல்துறை. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் சோனம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ராஜா குஷ்வாஹா என்பவரை சோனம் காதலித்து வந்ததும், ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்த பிறகும் அவருடன் தொலைபேசியில் பேசியதும் தெரியவந்தது. திருமணம் முடிந்து நான்கு நாட்களுக்குப் பின் தனது தாய் வீட்டிற்குத் திரும்பிய சோனம் அங்குதான் கணவனை கொலை செய்யத் திட்டம் தீட்டியதும் அம்பலமானது.
ஆனால் கணவனை கொலை செய்ததை மறைக்கும் விதமாக தனக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், மேகாலாயாவில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிபூருக்கு யாரோ அழைத்து வந்துவிட்டதாகவும் சோனம் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் சோனம்தான் இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளார் என்பது பின்னர் அம்பலமானது. அதன்பின் மேகாலாயாவின் சில்லாங் நீதிமன்றத்தில் சோனம் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சோனமுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையைத் தொடர்ந்து ராஜ் குஷ்வாஹா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்த பிறகு அவரது இறுதிச் சடங்கில் ராஜ் குஷ்வாஹா ஒன்றும் தெரியாதது போல் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
June 10, 2025 11:16 AM IST


