Last Updated:
News18 Operation Sindoor Poll: பிரதமர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை வைப்பதன் மூலம், தேச நலனை விட்டுக் கொடுத்துவிட்டதாகக் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, 75.65 சதவீதம் பேர் ‘ஆம்’ என பதிலளித்து மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக நியூஸ் 18 எடுத்த சர்வேயில் பெரும்பாலானோர் மத்திய அரசுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளனர். இது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பிற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ‘நரேந்திர சரணடைந்தார்’ என்ற முழக்கத்தை சமூக வலைதளங்களில் காங்கிரஸ் பரப்பி வருகிறது.
இந்த சூழலில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக நியூஸ் 18 நெட்வொர்க், பொதுமக்கள் மத்தியில் 5 கேள்விகளை முன்னிறுத்தி சர்வே எடுத்தது. 2 நாட்கள் நடைபெற்ற சர்வேயில், இணையதளம், சமூக வலைதளம், QR Code வாயிலாக 14,671 பேர் கலந்துகொண்டனர். முதலாவதாக, “நரேந்திர சரணடைந்தார்” என்ற கருத்து ஏற்றுக்கொள்ளும்படி உள்ளதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு ‘இல்லை’ என 87.55 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை வைப்பதன் மூலம், தேச நலனை விட்டுக் கொடுத்துவிட்டதாகக் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, 75.65 சதவீதம் பேர் ‘ஆம்’ என பதிலளித்து மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல, தேச பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கருதுகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 88.06 சதவீதம் பேர் ‘ஆம்’ என பதிலளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கருத்துகள் பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, 86.27 சதவீதம் பேர் ‘இல்லை’ என பதிலளித்து காங்கிரஸுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதியாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் அயூப் கானுடன் சேர்ந்து கையெழுத்திட்டு ஜவஹர்லால் நேரு தேச நலனை விட்டுக் கொடுத்துவிட்டதாக பாஜக கூறிவருவதை ஏற்கிறீர்களா? என்ற கேள்வி பொதுமக்கள் முன் எழுப்பப்பட்டது. இதற்கு 83.38 சதவீதம் பேர் ‘ஏற்கிறோம்’ என பதிலளித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் ஈடு இணையற்ற வீரத்தையும் துணிச்சலையும் ராகுல் காந்தி ‘சரணடைதல்’ எனக் குறிப்பிடுவது அவர்களையும், 140 கோடி மக்களையும் அவமதிக்கும் செயல் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கருத்தை பாகிஸ்தானியர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பார்த்து சிரித்திருப்போம். ஆனால், ராகுல் காந்தி கூறியிருப்பது தேசத் துரோகத்திற்கு ஒப்பானது என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில், சர்வேயில் பங்கேற்ற பெரும்பாலானோரும் இதே மனநிலையையே வெளிப்படுத்தியுள்ளனர்.
June 08, 2025 8:50 AM IST
News18 Operation Sindoor Poll: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக நியூஸ் 18 சர்வே.. பெரும்பாலானோர் மத்திய அரசுக்கு சாதகமாக பதில்!


