துபாய் நகரைச் சேர்ந்த 78 வயதான ஓய்வுபெற்ற இந்தியரான ஹுசைன் அகமதுலி நல்வாலா, கடந்த 5 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சியை வழங்கி வருகிறார். ஈத் அல்-அதா விழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான ஒட்டகங்களை பலி கொடுத்து, நூற்றுக்கணக்கான கிராம வாசிகளுக்கு உணவளிக்கும் இந்த முயற்சி, அவரது அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது.
முன்பு ஒருமுறை, ஏமனுக்கு சென்றிருந்த போது அங்கு வறுமையை எதிர்கொண்ட பலரின் வாழ்க்கையை பார்த்த நல்வாலாவுக்கு, தொண்டு பணிகளின் மீது ஆர்வம் வந்தது. இதுவே, ஏமன், சோமாலியா, சூடான், எத்தியோப்பியா, ஜம்மு-காஷ்மீர், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவளிக்கவும் காரணமானது மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்கும் வித்திட்டது.
தொண்டு பணி குறித்து நல்வாலா பேசும்போது, “ஏமனில் வறுமையை எதிர்கொண்டவர்களை பார்த்த அந்த அனுபவம் என் கண்களைத் திறந்தது. எதுவும் இல்லாத, ஒரு நாளைக்கு ஒரு முறை கூட சரியான உணவு இல்லாத நபர்களைப் பார்த்தது, நான் ஓய்வு பெற்ற பிறகும் எனக்கு ஓய்வு கிடையாது என்பதை உணர்த்தியது. எனவே, ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன்.”
இதுவே, நல்வாலா விரைவில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கவும் அவருக்கு உந்துதலாக இருந்தது. தனது அறக்கட்டளையின் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு குடும்பங்களுக்கு உணவளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நல்வாலா, ஏமன், சோமாலியா, சூடான், எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களுக்கு ஒட்டகத்தை பலி கொடுத்து அதன் இறைச்சியை வழங்கி வருகிறார்.
“ஒரு ஒட்டகம் சுமார் 300 குடும்பங்களுக்கு உணவாக முடியும். இதன்மூலம், ஆண்டுக்கு ஒரு முறை இறைச்சி சாப்பிடும் வாய்ப்பு பலருக்கு கிடைக்கிறது” என்று நல்வாலா கூறினார். ஒட்டகத்தை வாங்கும் முன் அவரே, நேரடியாக புகைப்படங்கள் மூலம் அவற்றின் நலத்தையும், மத நெறிமுறைகளையும் உறுதி செய்கிறார்.
அங்கீகரிக்கப்பட்டவுடன், இறைச்சி கவனமாகப் பிரிக்கப்பட்டு அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வந்த, நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளில் வசித்து வரும், பயணம் செய்ய முடியாத குடும்பங்களுக்கு தன்னார்வலர்கள் அவர்களின் வசிப்பிடத்திற்கு நேரில் சென்று வழங்குகிறார்கள்.
ஆப்பிரிக்கா மட்டுமின்றி, இந்தியாவிலும் நல்வாலா தனது பணியை விரிவுபடுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் சம்பல், பந்திப்பூர் மற்றும் மும்பை போன்ற பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக குர்பானி இறைச்சி வழங்கப்பட்டு வருகிறது. மும்பையில் திருவிழாவின் போது, அவரது குழு 1,500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்கிறது.
“வறுமையில் வாழும் மக்களுக்கு வயிறாற உணவு தருவதைவிட பெரிய தொண்டு வேறு எதுவும் இல்லை. எனவே, எனக்கு ஓய்வே கிடையாது, இது என் வாழ்நாள் பணியாகும்” என்றும் நல்வாலா கூறியுள்ளார்.
June 07, 2025 3:10 PM IST
78 வயதான முதியவரின் முயற்சியால் ஆண்டுக்கு ஒரு முறையாவது இறைச்சி சாப்பிடும் மக்கள் – உருக்கமான பதிவு!

