Last Updated:
ஃபேஸ்புக்கில் நன்கு அறியப்பட்ட இன்ஃப்ளுயன்ஸர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாகத் தோன்றும் ஒரு இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, மோசடி வலையில் சிக்கியுள்ளார்.
கேரளாவின் மூவாட்டுப்புழாவில் வசிக்கும் ஒருவர், வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட பங்குச் சந்தை மோசடியில் சிக்கி, இரண்டு வார காலத்தில் ரூ.52.85 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் நன்கு அறியப்பட்ட இன்ஃப்ளுயன்ஸர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாகத் தோன்றும் ஒரு இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, இந்த மோசடி வலையில் அவர் சிக்கியுள்ளார்.
வழக்கமான பங்குச்சந்தை நேரத்திற்குப் பிறகு நடத்தப்படும் மொத்த பங்கு வர்த்தகம் (பிளாக் டிரேடிங்) மூலம் அதிக வருமானத்தை வழங்குவதாகக் கூறும் ஒரு வர்த்தக தளத்தை விளம்பரப்படுத்தியது விளம்பர அமைப்பு. ஆர்வமடைந்த அந்த நபர் இணைப்பைக் கிளிக் செய்யவே, அது அவரை ‘மணி ஃபை டாடா கேபிடல்’ என்ற பெயரிடப்பட்ட ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு திருப்பிவிட்டது.
அந்தக் குழுவில் சேர்ந்த சிறிது நேரத்திலேயே, நிதி ஆலோசகர்களாகக் காட்டிக் கொண்ட நபர்கள் அவரைத் தொடர்பு கொண்டனர். அனுஷ்கா டீ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணும், ஜெயின் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஆணும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவருடன் தொடர்பு கொண்டனர். தங்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்க, டாடா கேபிடல் நிறுவனத்தின் துணைத் தலைவர் என்று கூறப்படும் ரோஹித் மல்வங்கரின் போலியான லிங்க்டின் சுயவிவரத்தைப் பயன்படுத்தினர்.
முதலில் அந்த நபரை டேட்டா டெக் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இது ஒரு முறையான முதலீடு என்று நம்பி, மே 13 அன்று முதற்கட்டமாக ரூ.2 லட்சத்தை அவர் டெபாசிட் செய்துள்ளார். அடுத்த நாள், லாபம் ஈட்டியதற்கான போலிப் பதிவுகளை அவரிடம் காட்டியுள்ளனர். இதை நம்பிய அவர், மேலும் ரூ.3 லட்சத்தை மோசடி நபர்களின் கணக்கிற்கு மாற்றியுள்ளார். மே 13 முதல் மே 31 வரை 12 பரிவர்த்தனைகள் மூலம், மோசடி நபர்கள் வழங்கிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் அவர் தொடர்ந்து அதிக பணத்தை டெபாசிட் செய்து வந்துள்ளார். தோராயமாக ரூ.52.85 லட்சத்தை இப்படி டெபாசிட் செய்துள்ளார்.
மோசடி நபர்கள் அதோடு நிற்கவில்லை. அவர்கள் மேலும் ரூ.80 லட்சம் பணம் கேட்டு, இந்தத் தொகையைக் கொண்டு மூன்று நாட்களுக்குள் மூன்று லட்சம் பங்குகளை வாங்குவதாகவும், அதன் மூலம் அவருக்கு ரூ.4 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் கூறினர். ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த அவர், ஒரு பட்டயக் கணக்காளரை அணுகியுள்ளார். நிலைமையை மதிப்பாய்வு செய்த ஆடிட்டர், இவை அனைத்தும் மோசடி என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து மோசடி நபர்களிடம், தன்னால் கூடுதலாக ரூ.80 லட்சம் ஏற்பாடு செய்ய முடியாது என்றும், ஏற்கனவே கிடைத்ததாகக் கூறப்படும் லாபமே போதுமெனத் தெரிவித்தபோது, அவர்கள் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்யுமாறு பேரம் பேசியுள்ளனர். இந்தக் கட்டத்தில்தான் பாதிக்கப்பட்டவர் மோசடியின் அளவை உணர்ந்து உடனடியாக காவல்துறையை அணுகினார். மூவாட்டுபுழா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, போலி நிறுவனங்கள் மற்றும் கற்பனையான அடையாளங்களின் கீழ் செயல்படும் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
June 05, 2025 8:43 PM IST


