Last Updated:
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். விராட் கோலி இதுகுறித்து உருக்கமான பதிவை வெளியிட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இதை பெங்களூருவில் கொண்டாட வந்த ஆர்சிபி அணியினரை பெங்களூரு விமான நிலையத்துக்கே சென்று துணை முதலமைச்சர் சிவக்குமார் வரவேற்றார். அங்கிருந்து நேரடியாக சட்டப்பேரவை வளாகமான விதான் சவுதாவுக்கு முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க சென்றனர்.
அப்போது, ஆர்சிபி அணி வீரர்களைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. அப்போது வீரர்களை காணும் ஆவலில் ரசிகர்கள் பலர் அருகே இருந்த மரங்கள் மற்றும் உயர்நீதிமன்ற வளாகக் கட்டடங்கள் மீது ஏறியதால் அசாதாரண சூழல் நிலவியது. மற்றொருபுறம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கும் தரைகளே தெரியாத அளவிற்கு பல மீட்டர் தூரத்துக்கு ரசிகர்கள் குவிந்தனர்.
ஆர்சிபி வீரர்களை பார்த்துவிடும் ஆவலில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். வீரர்களை பார்க்கும் முனைப்பில் பலர் மைதானத்தின் தடுப்புச் சுவர், மரக்கிளைகள் மீது போட்டி போட்டுக் கொண்டு ஏறினர்.
மைதானத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் மீது ஏராளமானோர் நின்றிருந்த போது, கால்வாயின் கான்கிரீட் ஸ்லாப் பாரம் தாங்காமல் உடைந்து விழுந்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
பெற்றோருடன் வந்திருந்த 14 வயது சிறுமி திவ்யான்ஷி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர். அதில், இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எதிர்பாரதவிதமாக நிகழ்ந்த சோக சம்பவத்துக்கு மத்தியில், மைதானத்திற்கு வந்த வீரர்களுக்கு சிறிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சோக சம்பவம் குறித்து ஆர்சிபி அணி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளது. அதனை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இன்று பிற்பகலில் அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு முழுவதும் மக்கள் கூடும் சூழ்நிலை உருவானது. அதில் ஏற்பட்ட துயரம் சம்பவம் அறிந்து நாங்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறோம். அனைவரின் பாதுகாப்பும் நலனும் எங்களுக்கு மிக முக்கியமானது. RCB அணி, இந்த துயரான நிகழ்வில் உயிரிழந்தவர்களை நினைந்து வாடுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நிலைமை குறித்து உடனடியாக எங்களை அறியவந்ததும், நாங்கள் எங்கள் திட்டங்களை மாற்றியமைத்தோம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றினோம். எங்கள் ஆதரவாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Bangalore [Bangalore],Bangalore,Karnataka
June 05, 2025 7:58 AM IST


