அதன்படி ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விழா பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர். அவர்களை அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விமான நிலையம் சென்று வரவேற்றார். பிறகு மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடவும், வெற்றி விழாவில் பங்கேற்று வீரர்களைப் பாராட்டவும் லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் இன்று சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சோக நிகழ்வுக்கு அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” எனத் தெரிவித்தார். அதேசமயம், அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, “எந்தத் திட்டமிடலும், முன்னேற்பாடும் இன்றி இவ்வளவு பெரிய நிகழ்வை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்வு குறித்து, அவர்களுக்குத் தெரியாதா? பாதிக்கப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் பேசினேன், அங்கு அவசர ஊர்தியும் இல்லை, காவல்துறையினரும் மைதானத்தில் இல்லை. இது என்ன மாதிரியான அலட்சியம்? அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன, குழந்தைகள் உட்பட பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மாநில அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீவிரத்துடன் கையாள வேண்டும் என்று நான் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “அன்பு மற்றும் பாசத்தை விட உயிர் முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டு, பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்குமாறு பொதுமக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியைக் கேள்விப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தத் துயரத்தின் வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்துவிட்டது.
ಬೆಂಗಳೂರಿನ ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಕ್ರೀಡಾಂಗಣದಲ್ಲಿ ಆರ್ಸಿಬಿ ತಂಡದ ಗೆಲುವಿನ ಸಂಭ್ರಮಾಚರಣೆ ವೇಳೆ ನೂಕುನುಗ್ಗಲು ಉಂಟಾಗಿ ಹಲವರು ಪ್ರಾಣ ಕಳೆದುಕೊಂಡು, ಮತ್ತೆ ಕೆಲವರು ಗಂಭೀರ ಗಾಯಗೊಂಡ ಸುದ್ದಿ ಕೇಳಿ ತೀವ್ರ ಆಘಾತವಾಗಿದೆ.
ಈ ದುರಂತದ ನೋವು ಗೆಲುವಿನ ಸಂಭ್ರಮವನ್ನೂ ಅಳಿಸಿಹಾಕಿದೆ.
ಮೃತರ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಸಿಗಲಿ, ಗಾಯಗೊಂಡು ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ…— Siddaramaiah (@siddaramaiah) June 4, 2025
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், காயமடைந்தவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் விரைவில் குணமடையட்டும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவத்தால் வெற்றி அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைதானத்திற்கு அருகில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. அன்பு மற்றும் பாசத்தை விட உயிர் முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டு, பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்குமாறு பொதுமக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து முதல்வர் சித்தராமையா, கூட்ட நெரிசலில் சிக்கி காயங்களுடன் பவுரிங் மற்றும் வைதேஹி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
June 04, 2025 8:09 PM IST
“அன்பு மற்றும் பாசத்தை விட உயிர் முக்கியமானது..” – பெங்களூரு சோக நிகழ்வு குறித்து முதல்வர் சித்தராமையா வருத்தம்

