Last Updated:
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான எடியூரப்பா “கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என கமல்ஹாசன் பேசியது, கர்நாடகாவில் சர்ச்சையான நிலையில், அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, மொழி குறித்து பேச கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா இல்லை, வரலாற்று ஆய்வாளரா என வினவினார். பொதுவெளியில் ஒரு பிரபலமான நபர் இப்படி பேசலாமா என கமலுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார். மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், தான் உருவாக்கிய பிரச்னைக்கு, தற்போது காவல்துறை பாதுகாப்பு கேட்டு சினிமா வியாபாரத்திற்காக கமல்ஹாசன் வந்திருப்பதாகவும் நீதிபதி கடுமையாக சாடினார்.
நீர், நிலம், மொழி இவை மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது என்றும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பின்னர் மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையடுத்து 2.30 அளவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது கமல் தரப்பில், “நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக கமல் தரப்பில், “யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கமல் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன் கன்னட மொழி மீது நிகரற்ற அன்பை வைத்திருக்கிறார்” என்பதை கேட்ட நீதிபதிகள், “இந்த கடிதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஏன் மன்னிப்பு இல்லை” என கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் தரப்பு, “தவறு செய்தால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான எடியூரப்பா “கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எடியூரப்பா, “கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்திய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மொழியியல் நிபுணராக இல்லாத கமல் கன்னட மொழி குறித்து பேசியது வருந்தத்தக்கது. மன்னிப்பு கேட்பதால் சிறியவராகவோ, ஆணவத்தால் பெரியவராகவோ ஆவதில்லை. நல்லிணக்கத்தை தேவையின்றி சீர்குலைப்பது சரியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
June 03, 2025 5:41 PM IST


