மோட்டார் வாகனச் சட்டம் 1988, சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. இந்தச் சட்டம் இழப்பீட்டுக் கோரிக்கைகளைக் கையாளும் இரண்டு முக்கியமான விதிகளை உள்ளடக்கியது பிரிவு 163A மற்றும் பிரிவு 166.
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 163A, சாலை விபத்தில் யார் தவறு செய்தார்கள் என்பதை நிரூபிக்காமல் இறந்தவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோர அனுமதிக்கிறது. விபத்துக்கு யார் காரணம் அல்லது அது எப்படி நடந்தது என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும், இழப்பீடு வழங்கப்படலாம். இது “தவறு இல்லாத கோரிக்கை” என்று அழைக்கப்படுகிறது. மேலும், விபத்து பற்றிய துல்லியமான விவரங்களைச் சேகரிப்பது பெரும்பாலும் கடினமாக இருப்பதால், குடும்பங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
மறுபுறம், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 166, விபத்து வேறொருவரின் அலட்சியத்தால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தால் பொருந்தக்கூடியது. இது போன்ற சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் வாகன உரிமையாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்தோ இழப்பீடு கோரலாம். ஆனால், அவர்கள் மற்ற தரப்பினரின் தவறு என்பதை நிரூபிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு லாரி பொறுப்பற்ற முறையில் ஓட்டப்பட்டு ஒரு உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தினால், லாரி ஓட்டுநரின் அலட்சியத்தை நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் குடும்பத்தினர் இழப்பீடு கோரலாம்.
விபத்தில் இறந்தவருக்கு காப்பீடு இல்லையென்றால் என்ன செய்வது?
இறந்தவருக்கு தனிப்பட்ட காப்பீடு இல்லாவிட்டாலும், அந்தக் குடும்பம் இழப்பீடு பெறத் தகுதியுடையதாக இருக்கலாம். இந்தியாவில், அனைத்து வாகன உரிமையாளர்களும் மூன்றாம் தரப்புக் காப்பீட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். இதன் மூலம், அவர்களின் வாகனம் ஒருவருக்குக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தினால், இறந்தவருக்கு ஏதேனும் காப்பீட்டுத் தொகை இருந்ததா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் காப்பீட்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்குப் பொறுப்பாகும்.
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றால் என்ன செய்வது?
பல நேரங்களில், விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிடுவார். இல்லாவிட்டால் விபத்து ஏற்படுத்திய வாகனம் அல்லது ஓட்டுநரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காது. இது போன்ற சம்பவங்கள் ஹிட்-அண்ட்-ரன் வழக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் எந்தக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனி நபரிடமிருந்தோ இழப்பீடு கோர முடியாது. ஏனெனில், குற்றவாளி அடையாளம் காணப்படவில்லை.
இதை நிவர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் 2022-ம் ஆண்டு மோட்டார் வாகன விபத்து நிதியை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், வாகனம் மோதிவிட்டு நிற்காமல் செல்லும் விபத்தில் இறப்பவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் கிடைக்கும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அல்லது சட்டப் போராட்டத்தைத் தொடர வழிகள் மற்றும் வளங்கள் இல்லாதவர்களுக்கு இது மிகவும் உதவிகரமானது. நெருக்கடிக் காலங்களில் இது அத்தியாவசிய நிதி நிவாரணத்தை வழங்குகிறது.
வழக்கறிஞரின் உதவி இல்லாமல் இழப்பீடு பெற முடியுமா?
ஆம், இழப்பீடு கோருவதற்கு வழக்கறிஞரை நியமிக்க வேண்டியது கட்டாயமில்லை. இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்பான இழப்பீட்டு வழக்குகளைக் கையாளும் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயங்கள் (MACT) எனப்படும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கையைத் தாக்கல் செய்ய MACT-ஐ நேரடியாக அணுகலாம். விபத்து நடந்த மாவட்டம் அல்லது குடும்பத்தினர் வசிக்கும் மாவட்டத்தில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
முக்கியமாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தால் சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாவிட்டால், அரசாங்கச் சட்ட உதவி சேவைகள் அல்லது சில அரசு சாரா நிறுவனங்கள் (NGO) இலவச உதவியை வழங்குகின்றன. கோரிக்கையைத் தாக்கல் செய்வதற்கும், தேவையான ஆவணங்களை நிர்வகிப்பதற்கும் இவர்கள் உதவுகிறார்கள். MACT வழக்கை ஆராய்ந்து, கோரிக்கை செல்லுபடியாகும் எனக் கண்டறியப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அல்லது அரசாங்கத்தை இழப்பீடு வழங்குமாறு அறிவுறுத்துகிறது.
June 03, 2025 7:11 PM IST
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீடு இல்லையென்றால், இழப்பீடு பெற குடும்பத்தினர் என்ன செய்யலாம்…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

