பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமி, ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, 30 வயதான இளைஞர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அந்த இளைஞர், சிறுமிக்கு சாக்லேட் மற்றும் குர்குரே வாங்கித் தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆள் இல்லாத இடத்திற்கு 9 வயது சிறுமியை தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கத்தியால் சிறுமியின் உடலில் 20 இடங்களில் வெட்டிய கொடூரன், கழுத்தையும் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார். சிறுமியை தேடி அழைந்த பெற்றோர், அவர் குற்றுயிரும் குலையுயிருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்ட பெற்றோர், முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கழுத்தில் ஆழமாக வெட்டுக்காயம் ஏற்பட்டதால் சிறுமிக்கு பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணிக்கப்பட்டு வந்தார். கடந்த மே 26 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, ரோஹித் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே முசாபர்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல்நிலை, கடந்த சனிக்கிழமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், மேல் சிகிச்கைக்காக பாட்னாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். உடனே, அவரின் பெற்றோர் சிறுமியை பாட்னாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லை எனக் கூறி தாமதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய சிறுமி, 6 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பின் பாட்னா மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஞாயிறு அன்று அந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுக்கப்பட்ட சிறுமிக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயுமா?, தலித் சிறுமியின் மரணத்தில் நீதி கிடைக்குமா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
June 02, 2025 3:24 PM IST
பாலியல் வன்கொடுமை.. கழுத்து உள்ளிட்ட 20 இடங்களில் கத்தியால் வெட்டு.. 9 வயது சிறுமிக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!

