Last Updated:
உலக அழகிப்போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபால் சுச்சாதா மகுடம் சூடியுள்ளார். 21 வயதான அவர் புற்றுநோயிலிருந்து மீண்டவர். இந்திய அழகி நந்தினி குப்தா டாப் 20 வரை தகுதிபெற்றார்.
ஐதராபாத்தில் நடந்த உலக அழகிப்போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபால் சுச்சாதா மகுடம் சூடியிருக்கிறார்.
72 ஆவது உலக அழகிப்போட்டி ஐதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில், இந்தியாவின் சார்பாக நந்தினி குப்தா உள்ளிட்ட மொத்தம் 109 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
தெலங்கானாவில் உள்ள பாரம்பரிய கோயில்கள், கைவினைக் கலைகள் செய்யும் இடங்களுக்கு அழகிப்போட்டியில் பங்கேற்றவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்தியாவின், கலை, கலாசாரம் உள்ளிட்டவை அழகாக இருந்ததாக போட்டியில் பங்கேற்றவர்கள் வர்ணித்தனர். டாப் 20 அழகிகள் சுற்று வரை இந்திய அழகி நந்தினி தகுதிபெற்றிருந்தார். இந்த சூழலில் தெலங்கானா மாநிலம் ஹைட்டெக்ஸ் எக்சிபிஷன் மையத்தில் இறுதிப்போட்டி நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியை 2016ஆம் ஆண்டு உலக அழிகப்பட்டம் வென்ற ஸ்டெஃபானியும், சசின்கும்பரும் தொகுத்து வழங்கினர். நடுவர்கள் குழுவில் இந்தி நடிகர் சோணு சூட், 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அழகி பட்டம் வென்ற கேரினா டுரல் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர். ஜாக்லின் பெர்னான்டஸ், இஷான் கட்டார் உள்ளிட்டோரின் அட்டகாசமான கலை நிகழ்ச்சியுடன் இறுதிப்போட்டி நடந்தது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் டாப் 3 இடங்களை பிடித்த அழகிகளுக்கு நடிகர்கள் சோனு சூட், ராணா டகுபாட்டி உள்ளிட்ட நடிகர்கள் கேள்விகளை முன்வைத்தனர். இதில் சாமர்த்தியமாக பதில் அளித்த தாய்லாந்தைச் சேர்ந்த ஒபால் சுச்சாதா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். தாய்லாந்து அழகிக்கு, கடந்தாண்டு உலக அழிகப்பட்டம் வென்ற செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழிகக்கான மகுடத்தை சூட்டினார்.
உலக அழிகப்போட்டியில் இரண்டாவது இடத்தை எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹசத் டெரிஜீ, மற்றும் 3 ஆம் இடத்தை போலந்தைச் சேர்ந்த மஜா லஜ்தா ஆகியோர் வென்று அசத்தினர். வெற்றி பெற்ற ஒபாலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 21 வயதாகும் ஒபால், புக்கெட் நகரில் பிறந்தவர், தாய், சீன மொழி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். தமாசட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து இளங்கலை பட்டத்தை படித்து வருகிறார். மேலும் ஒபால் சுச்சாதா தனது 16 ஆவது வயதில் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளார். தாய்லாந்தில் மார்பகப் புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவியுடம் திரட்டி வருகிறார்.
June 01, 2025 10:57 AM IST


