Last Updated:
மேற்கு வங்கத்தில் பிமல் மந்தல் தனது அண்ணி சாதி மந்தலை சொத்து பிரச்சினையால் கொலை செய்து, தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அண்ணியை கொலை செய்து, தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்ற சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
வயல்வெளிக்கு மத்தியில் உள்ள சாலையில் ஒருவர், அரிவாளுடன் கையில் எதையோ பிடித்து தூக்கிச் சென்று கொண்டிருந்தார். முதலில் அங்கிருந்தவர்கள் அவரின் கையில் உள்ளதை கவனிக்காமல் இருந்தனர். ஆனால், அதில் இருந்து ரத்தம் வடிந்ததால் அவரைக் கண்டு பொதுமக்கள் உறைந்து போயினர்.
அந்த நபர் கையில் இருந்தது துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தலை என்பதை அறிந்து, அவர் சென்ற வழியெல்லாம் மக்கள் தெறித்து ஓடினர். அந்த நபரோ எந்தவொரு சலனமும் இன்றி விறுவிறுவென நடந்து, நேராக பசந்தி காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கும், அவரைக் கண்ட போலீசார் ஒரு நிமிடம் ஆடிப் போயினர். பின்னர், அவரை சாந்தப்படுத்திய போலீசார் என்ன நடந்தது என்று கேட்டு விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், அவர் பிமல் மந்தல் என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் பிமல் மந்தலின் அண்ணன் மனைவி சாதி மந்தல் எனவும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாக குடும்பத்தினர் மத்தியில் தகராறு ஏற்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக சாதி மந்தல், தனது கொழுந்தனார் பிமலிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதனால், ஏற்பட்ட மோதலில் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று பிமல் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பிமல், தனது அண்ணி சாதி மந்தலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், கொடூரமாக அவரின் தலையை துண்டித்து எடுத்துக்கொண்டு, நடந்தே காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இதை தொடர்ந்து, பிமல் மந்தலை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணியை கொலை செய்த கொழுந்தனார், தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்ற சம்பவம் மேற்குவங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
May 31, 2025 10:22 PM IST
அண்ணியின் தலையை துண்டித்து கையில் அசால்ட்டாக எடுத்து சென்ற கொழுந்தனார்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!


