Last Updated:
முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்கள் எடுத்திருந்தது
இந்தியா ஏ அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணியின் இளம் வீரர்கள் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரியூ பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்தியா ஏ அணி பேட்டிங்கை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 186 ரன்கள் எடுத்திருந்தார். சர்ப்ராஸ் கான் 92 ரன்கள் எடுத்தும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களும் எடுத்திருந்து ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றபோது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். 281 பந்துகளை எதிர்கொண்ட அவர் 204 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 94 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
May 31, 2025 11:00 PM IST


