Last Updated:
2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் BSNL நிறுவனம் 280 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 262 கோடி ரூபாய் லாபத்தை நிறுவனம் பெற்றுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக, அரசு நடத்திவரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம், பல வருட இழப்புகளுக்குப் பிறகு மீண்டும் லாபங்களைப் பெறத் தொடங்கியுள்ளது. 2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் BSNL நிறுவனம் 280 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. மூன்றாவது காலாண்டில் 262 கோடி ரூபாய் லாபத்தை நிறுவனம் பெற்றுள்ளது.
எனவே, 542 கோடி என்ற இந்த இரண்டு காலாண்டின் லாபங்களுடன், BSNL நிறுவனம் தொடர்ச்சியாக இழப்புகளைப் பதிவு செய்ததிலிருந்து பெரிய அளவில் மீண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் BSNL நிறுவனம் 849 கோடி ரூபாய் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில், டிஜிட்டல் யுகத்திற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறையில் முக்கியமான அடையாளச் சின்னமாகத் திகழ்ந்து வந்த BSNL நிறுவனத்தின் இந்தப் புத்தெழுச்சி என்பது, நிறுவனத்தின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முக்கியமான ஒரு மாற்றமாகக் கருதப்படுகிறது. தீவிரமான பொருளாதார ஒழுக்கம், செயல்பாட்டுச் சீரமைப்பு மற்றும் அரசு ஆதரவு மூலமாக BSNL நிறுவனம் இந்த நிலையைத் தற்போது அடைந்துள்ளது.
நீண்ட காலமாகத் தாமதமாகி வந்த 4G வெளியீட்டை விரைவுபடுத்துதல் என்பது BSNL நிறுவனம் ஏற்படுத்திய முக்கியமான மாற்றங்களில் ஒன்று. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை BSNL நிறுவனம் மீட்டெடுத்துள்ளது. அதிலும், குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் மார்க்கெட்டுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மீது BSNL நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தது.
தனியார் ஃபைபர் இன்டர்நெட் சேவைகளை விரிவாக்கம் செய்யும் வேலைகள் தாமதமாக்கப்பட்ட பகுதிகளில், BSNL நிறுவனத்தின் ஃபைபர் டு தி ஹோம் (FTTH) சேவைகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருப்பதாக BSNL நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு தொடர்ந்து BSNL நிறுவனத்திற்கு மூலதனத்தை வழங்கி, டிஜிட்டல் இந்தியா என்ற பெயரை அடைவதில் முக்கியப் பங்கு வகித்தது என்று கூறலாம்.
அரசாங்க ஆதரவு மற்றும் முதலீடு இருந்தபோதிலும், மந்தநிலை மற்றும் நிதி கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட காலமாக நிறுவனத்தின் உள்கட்டமைப்பு முடங்கி இருந்தது. கடினமான உழைப்பின் காரணமாக BSNL பெற்ற வெற்றிகளுக்கு ஓய்வு கொடுக்காமல், நிறுவனம் தொடர்ந்து பாடுபட்டு இழப்புகளை மீட்டெடுத்து தற்போது லாபங்களைச் சம்பாதித்து வருகிறது.
மேலும் 2025ஆம் ஆண்டிற்குள் PAN இந்தியா 4G பயன்பாட்டை முடிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 5G வெளியிடுவது சம்பந்தமான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு நேரடிச் சவால் விடும் வகையில் FTTH வாடிக்கையாளர் தளத்தை இரட்டிப்பாக்க BSNL நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சரியான ஆதரவு மற்றும் தொலைநோக்குப் பார்வை இருந்தால், தனியார் நிறுவனத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிச் சாதிக்க முடியும் என்று BSNL நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


