Last Updated:
குலாம் நபி அசாத் குவைத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி பாகிஸ்தானில் இருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை தாக்கி அழித்தது. இதன் பிறகு இருநாட்டுக்கும் இடையே பதில் தாக்குதல்கள், போர் பதற்றம் எழுந்தது. பின் அமெரிக்காவின் தலையீட்டினால் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு வந்தது.
அதேபோல், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை உலகநாடுகளிடம் தெரிவிக்க எம்.பி.க்கள் தலைமையில், 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளனர். அதன்படி, பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் ஒரு குழுவினர் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளது. அந்தக் குழுவில் ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான குலாம் நபி அசாத் இருக்கிறார். இந்தக் குழு தற்போது குவைத் நாட்டில் உள்ளது.
இந்தச் சூழலில், குலாம் நபி அசாத்திற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா, தனது எக்ஸ் பக்கத்தில், “தூதுக்குழு தனது பயணத்தில் இருக்கும் நிலையில், குலாம் நபி அசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பஹ்ரைன் மற்றும் குவைத்தில் நடந்த கூட்டங்களுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தின” எனப் பதிவிட்டுள்ளார்.
Halfway into our delegation’s tour, Shri @ghulamnazad has had to be admitted to hospital. He is stable, under medical supervision, and will be undergoing some tests and procedures . His contributions to the meetings in Bahrain and Kuwait were highly impactful, and he is… pic.twitter.com/73CL9nqQGl
— Baijayant Jay Panda (@PandaJay) May 27, 2025
இந்நிலையில், குலாம் நபி அசாத் தனது எக்ஸ் பக்கத்தில், “குவைத்தில் கடுமையான வெப்பம் என் உடல்நலத்தைப் பாதித்த போதிலும், கடவுளின் கிருபையால் நான் நலமாக இருக்கிறேன், குணமடைந்து வருகிறேன் என்பதை பகிர்ந்துகொள்கிறேன். எடுக்கப்பட்ட அனைத்து சோதனை முடிவுகளும் நான் நலமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. உங்கள் அக்கறைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
Blessed to share that despite the extreme heat in Kuwait affecting my health, by God’s grace I’m doing fine and recovering well. All test results are normal. Thank you all for your concern and prayers — it truly means a lot!
— Ghulam Nabi Azad (@ghulamnazad) May 27, 2025
இந்த விவகாரம் தெரியவந்ததும், பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக குலாம் நபி அசாத்தைத் தொடர்பு கொண்டு பேசி அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து, அவர் விரைவில் குணமடைந்து திரும்பவும் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
குலாம் நபி அசாத்திற்கு என்ன ஆனது? – செய்தி அறிந்ததும் போன் போட்ட பிரதமர் நரேந்திர மோடி


