வெற்று கேளிக்கை கொண்டாட்டமாக இல்லாமல், அடிமைத் தளைகளை உடைத்தெறியும் ஒடுக்கப்பட்ட மக்களின் ராப் பாடல்களின் நாயகனுக்கு கேரளாவில் ரசிகர் பட்டாளம் பெரிது. அங்குள்ள வலதுசாரிகளும், சங் பரிவார் அமைப்புகளையும் இவரது பாடல்கள் தொந்தரவு செய்வதுதான் கேரள மாநிலத்தின் இப்போதைய ஹாட் டாபிக்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி. திருச்சூரில் வளர்ந்த இவர், சிறுவயதில் மீன் பிடிப்பதில் கைதேர்ந்தவராக இருந்ததால், அவரது நண்பர்கள் அவரை ‘வேடன்’ என்று செல்லமாக அழைத்தனர். அதற்குப் பின் சாதிய ஒடுக்குமுறை இருந்தாலும் அதையே தன் அடையாளமாக மாற்றினார் ஹிரந்தாஸ் முரளி.
ராப் இசையால் ஈர்க்கப்பட்ட ஹிரந்தாஸ், முதன்முறையாக வேடன் என்ற பெயரில் 2020 ஆம் ஆண்டில் “வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்” என்ற தனது முதல் இசை வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலம் ஆனார். அப்போது அவருக்கு வயது 25.
சாதி பாகுபாடு, நிறவெறி மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களின் வலிகளை தனது கூர்மையான வரிகள் மூலம் சமுதாயத்தின் மீது தாக்குதலை தொடுத்தார். இவரது முதல் ஆல்பமே கேரளாவில் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், அதே ஆண்டில், வெளியான “பூமி என்ஜன் வாழுனிதம்” (Bhoomi Njan Vazhunidam) என்ற ஆல்பம் அவருக்கு பெரும் அடையாளத்தை கொடுத்தது.
2021 ஆம் ஆண்டில், வெளியான நயட்டு என்ற மலையாளப் படத்தின் “நரபலி” என்ற பாடலைப் பாடி திரைத்துறையில் முதல் அடியை எடுத்து வைத்தார். பிளாக் பஸ்டர் படமான மஞ்சும்மல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து ‘குதந்திரம்’ பாடலை எழுதிப் பாடினார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான நரிவேட்டை படத்திலும் வேடனின் கலகக் குரல்தான்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறிப்போன வேடனை சர்ச்சைகளும் துரத்தாமல் இல்லை. அண்மையில் சிபிஎம் விழாவில் பங்கேற்க கடந்த மாதம் 28ஆம் தேதி இடுக்கி வந்திருந்த வேடன், கஞ்சா பயன்படுத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், அதற்கு மறுநாள் சிறுத்தைப் பல் பொறுத்த செயினை அணிந்திருந்ததாக வனத்துறை பிடித்தது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்” என்ற பாடலில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வேடன் மீது மத்திய உள்துறை அமைச்சருக்கும், என்.ஐ.ஏ-க்கும் பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் என்பவர் புகார் அளித்திருக்கிறார். இந்த சர்ச்சைகளைத் தாண்டி வேடனுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

