Last Updated:
பொதுவாக பாம்பு கடி அல்லது நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து விசாரணைக்குப் பிறகு, ரூ.11.26 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு 47 பேரின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள கியோலாரி தாலுகாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரே நபரை பலமுறை இறந்துவிட்டதாகக் காட்டி, அரசாங்கக் கணக்கில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இங்கு அரசாங்க பதிவுகளில் 47 பேர் இறந்ததாக 280 முறை காட்டப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு மரணத்திற்கும் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அரசாங்கம் அங்கீகரித்ததால், மொத்தம் ரூ.11 கோடியே 26 லட்சம் ஊழல் நடந்துள்ளது.
வருவாய் மற்றும் கணக்குத் துறையின் விசாரணைக்குப் பிறகு இந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன, இதில் 37 பேர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் உட்பட 21 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். உதாரணமாக, பாம்பு கடித்து இறந்த துவாரகா பாய் என்ற பெண், அதிகாரிகளால் 29 முறை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், ஒவ்வொரு முறையும், ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை அவரது பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம் ரூ.1 கோடியே 16 லட்சம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் என்ற நபருக்கும் இதே நிலைதான். அவர் இறந்துவிட்டதாக 28 முறை அறிவிக்கப்பட்டார், ஒவ்வொரு முறையும் அவரது பெயரில் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. இழப்பீட்டு தொகையை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் நடப்பது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே 2019-2022க்கு இடையில் நடந்தன, மேலும், அவை நவம்பர் 2022இல் வருவாய்த்துறை ஆடிட்-இன் போது வெளிச்சத்திற்கு வந்தன.
பொதுவாக பாம்பு கடி அல்லது நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து விசாரணைக்குப் பிறகு, ரூ.11.26 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு 47 பேரின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது என்று கருவூலம் மற்றும் அக்கௌன்ட் டிபார்ட்மென்ட்டின் விசாரணை அதிகாரி ரோஹித் சிங் கௌஷல் தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பணம் வழங்கப்பட்டவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது உயிருடன் இருக்கிறார்களா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை, ஏனெனில், பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து இந்த விசாரணை அறிக்கையை அரசாங்கத்திற்கும், சியோனி கலெக்டருக்கும் அனுப்பியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின்போது, கியோலாரி தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றும் சச்சின் தஹாயத், நிதி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பாம்பு கடி, நீரில் மூழ்கி மற்றும் மின்னல் இறப்புகளைக் காரணம் காட்டி 280 பேரின் பெயர்களில் பெறப்பட்ட இழப்பீடு தொகை, அவர்களின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணை அறிக்கையில், 2019 முதல் 2022 வரை கியோலாரியில் பணியாற்றிய SDM அமித் சிங் பம்ரோலியா மற்றும் நான்கு தாசில்தார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
2019 மற்றும் 2022க்கு இடையில், கியோலாரி தாலுகாவில் சச்சின் தஹாயத் என்ற கிளார்க் பல RBC 64 வழக்குகளில் உள்ள தொகையை வேறு கணக்குகளுக்கு மாற்றினார் என்று கலெக்டர் சமஸ்கிருதி ஜெயின் தெரிவித்தார். இதன் மூலம் ரூ.11 கோடியே 26 லட்சம் மோசடி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி வழக்கு குறித்து நிதித்துறை தற்போது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று சியோனி மாவட்ட நீதிபதி சமஸ்கிருதி ஜெயின் தெரிவித்தார். மோசடியை அடுத்து சச்சின் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 21 பேரில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


