Last Updated:
வங்கதேசத்தில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் St Martin’s தீவு பிரச்னை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளர்ச்சி வெடித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து, சுமார் 700 பேர் கொல்லப்பட்டனர். போராட்டம் வலுப்பெற்றதை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வேறு வழியில்லாமல் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால நிர்வாகியாக பொறுப்பேற்றார்.. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு கடந்த 12-ஆம் தேதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முகமது யூனுசை ஷேக் ஹசீனா கடுமையாக சாடி வருகிறார். முகமது யூனுஸ் நாட்டையே அமெரிக்காவுக்கு விற்பதாகவும், தீவிரவாத குழுக்களின் உதவியுடன் வங்கதேச அரசின் கட்டுப்பாட்டை யூனுஸ் எடுத்ததாகவும் அவர் சாடியுள்ளார். தனக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்கா தூண்டியதாகவும், இதற்கு காரணம் St Martin’s தீவை அந்நாட்டிற்கு தாரை வார்க்காதது தான் என்றும் ஹசீனா கூறியுள்ளார்..
St Martin’s, வங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் வங்கதேச தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள மிக அழகிய தீவு. 9 கிலோ மீட்டர் மட்டுமே கொண்ட St Martin’s வங்கதேசத்தின் ஒரே ஒரு பவள தீவாகும். இந்த தீவில் சுமார் 3,700 பேர் வசித்து வருகின்றனர்.. அவர்கள் மீன்பிடித்தல், நெல் சாகுபடி, தென்னை விவசாயம் மற்றும் கடற்பாசி சேகரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
St Martin’s ‘நரிகேல் ஜின்ஜிரா’ ( ‘Narikel Jinjira’) அதாவது தேங்காய் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. 1947- ஆம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்த இத்தீவு, பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது. 1971- ஆம் போரின் முடிவில் St Martin’s தீவு, வங்கதேசத்திற்கு சொந்தமானது. வங்கதேச அரசியலில் என்றுமே St Martin’s தீவுப் பிரச்சினை எப்போதும் எழுவதுண்டு.
வங்களா விரிகுடா முழுவதையும் கண்காணிக்க மிகச் சிறந்த இடம் St Martin’s தீவு. இப்பகுதியில் சீனாவின் கை ஓங்கி இருக்கும் நிலையில் St Martin’s தீவில் ராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனை அமெரிக்காவிடம் ஒப்படைக்காததால் தான், தனது தந்தை ஷேக் முஜ்பூர் ரகுமான் கொல்லப்பட்டதாகவும் ஷேக் ஹசீனா கூறி வருகிறார்… மேலும், வங்கதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க, காலிதா ஜியா St Martin’s தீவை அமெரிக்காவிற்கு தாரை வார்க்க தயாராக இருந்ததாகவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி வருகிறார்.
தற்போதும், St Martin’s தீவை அமெரிக்காவிடம் விற்பதற்கு முகமது யூனுஸ் முயன்று வருவதாகவும் ஷேக் ஹசீனா கூறிவருகிறார். தனக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை எனக் கூறி, முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்து வரும் நிலையில் St Martin’s தீவு பிரச்னை வங்கதேசத்தில் அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
செயின்ட் மார்ட்டின் தீவை கேட்கும் அமெரிக்கா.. போட்டு உடைத்த ஷேக் ஹசீனா.. மீண்டும் வெடித்த சர்ச்சை


