இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, ஜடேஜா, துரூவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால், முற்றிலும் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஜஸ்பிரித் பும்ராவை இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை பும்ரா வழிநடத்திய விதம் அதற்கு காரணமாக இருந்தது. ஆனால், பும்ராவிற்கு பதிலாக கேப்டனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், பும்ராவுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை என்பதற்கு தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா என்பதே சந்தேகம் தான். அவர் எத்தனைப் போட்டிகளில் ஆடுவார் என்பதிலேயே தெளிவு கிடையாது. 3 அல்லது 4 போட்டிகளில் விளையாட அவர் உடற்தகுதியுடன் இருந்தாலே, அது அணிக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும். அவர் அணியில் இடம்பெற்றதே பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் அணியில் இருப்பதில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. ஒரு வீரராக பும்ரா இந்திய அணிக்கு மிக முக்கியம். மேலும், கேப்டன்சி என்பது கூடுதல் அழுத்தம். பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டே அவரை கேப்டனுக்கான வாய்ப்பாக நாங்கள் பார்க்கவில்லை. எனவே தான் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார்” என விளக்கமளித்தார் அகர்கர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu

