Last Updated:
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் போதையில் தினமும் தகராறு செய்து வந்த காதல் கணவனுக்கு விட்டமின் மாத்திரை என்ற பெயரில் விஷ மாத்திரை கொடுத்து தீர்த்துக் கட்டியுள்ளார் தலைமை ஆசிரியை மனைவி.
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கடந்த 15ம் தேதி போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் எரிந்து கிடந்த நபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணையில் இறந்து கிடந்தவர் அணிந்திருந்த சட்டை மூலம் கொலை செய்யப்பட்டவர் பெயர் சாந்தனு தேஷ்முக் என்பது ‘தெரிய வந்தது.
இவர் யவத்மால் பகுதியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் சாந்தனுவின் காதல் மனைவி நிதிதேஷ்முக் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். விசாரணையில் இருவரும் காதலித்து திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் சாந்தனு மனைவி நிதி தேஷ்முக் மீது சந்தேகம் எழுந்தது. அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
சாந்தனுவும், நிதியும் காதலித்து திருமணம் செய்த புதிதில் நன்றாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் போகப் போக சாந்தனு குடிக்கு அடிமையாகி போதையில் திளைக்க ஆரம்பித்தார். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தால் மனைவியை அடித்து உதைப்பதே அவருக்கு வழக்கமாகப் போய் விட்டது. அவரின் சித்ரவதை தாங்க முடியாமல் தவித்து வந்த நிதி சாந்தனுவை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக ஆன்லைனில் மருந்துகளை தேடிய அவர், உள்ளூரில் விஷ மாத்திரையை வாங்கி அதனை விட்டமின் மாத்திரை என்று கூறி அன்போடு கணவனுக்குக் கொடுத்துள்ளார்.
என்னதான் போதையில் மனைவியை டார்ச்சர் செய்தாலும், மனைவிஅன்போடு கொடுத்த மாத்திரையை எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கி வாயில் போட்டிருக்கிறார் சாந்தனு. மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள சாந்தனு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசித்த நிதி, அதற்காக தன்னிடம் டியூஷன் படித்த மாணவர்களை உபயோகப்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அவர்களில் மூன்று பேருக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்த நிதி, அவர்களிடம் கண்ணீர் விட்டு கதை கூறி உடலை அப்புறப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். டீச்சரின் கண்ணீரைப் பார்த்து கரைந்து போன மாணவர்கள், அவரது கோரிக்கையைத் தட்ட முடியாமல் உடலை அப்புறப்படுத்த உதவ முன் வந்தனர். இதையடுத்து சாந்தனுவின் உடலை நான்கு பேரும் வாகனம் ஒன்றில் ஏற்றி செளசாலா வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று போட்டுவிட்டு வந்திருந்தனர்.
கொலை செய்யப்பட்ட நபரை போலீசார் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக அடுத்த நாள் நிதி தேஷ்முக் மட்டும் மீண்டும் உடலை போட்ட இடத்திற்கே சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நிதி தேஷ்முக்கை கைது செய்த போலீசார் உடலை அப்புறப்படுத்த உதவிய மூன்று மாணவர்களையும் கைது செய்தனர். கிரைம் திரில்லர் நாவலை மிஞ்சும் அளவுக்கு திட்டமிட்டு கணவனை தீர்த்துக் கட்டிய காதல் மனைவி கைதாகியிருப்பது அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விட்டமின் மாத்திரை பெயரில் விஷ மாத்திரை… டார்ச்சர் செய்த கணவரை தீர்த்து கட்டிய டீச்சர் – அதிரவைக்கும் பின்னணி


