Last Updated:
இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது – பிரதமர் மோடி
தனது நரம்புகளில் ரத்தம் ஓட வில்லை என்றும் சிந்தூர் (குங்குமம்) தான் ஓடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் கூறியுள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற வெற்றி பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பெகல்காமில் நடத்திய தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.
3 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தான் நிலை குலைந்து போனது. பின்னர் சமாதான பேச்சு வார்த்தையை ஏற்றுக் கொண்ட இந்தியா போரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ நடவடிக்கை வெற்றியை நாடு முழுவதும் இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் ராஜஸ்தானில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது, “பாரத மாதாவின் சேவகனாக மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன்.
மோடியின் எண்ணம் நிதானமாக தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் (குங்குமம்) தான் ஓடுகிறது. இனி பாகிஸ்தானிடம் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது.
பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். மக்களின் ஆசியாலும் ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். முப்படைகளின் அதிரடி தாக்குதலுக்கு முன்பாக பாகிஸ்தான் மண்டியிட்டது.
இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் மிக பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும். இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.


