Last Updated:
NEET PG | முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சீட் பிளாக்கிங் தடுப்பு, வெளிப்படையான கட்டண விவரங்கள் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
முதுநிலை நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு சில வழிகாட்டு நெறிமுறைகளை பரிந்துரைத்து வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் சேர்க்கையின்போது, இடங்களை பிளாக் செய்வதைத் தடுக்கும் வகையில், தேசிய அளவில் கலாந்தாய்வு அட்டவணை மற்றும் வழிமுறைகளை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களின் கலந்தாய்வு, கல்வி, விடுதி உள்ளிட்ட அனைத்து கட்டணம் குறித்தும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், தேசிய அளவிலான கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பை தேசிய மருத்துவ ஆணையம் தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 சுற்று கலந்தாய்வு முடித்த மாணவர்கள், வேறு நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், answer key உள்ளிட்டவற்றை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீட் பிளாக்கிங் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு உடந்தையாக இருக்கும் கல்லூரிகளை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீட் ஒதுக்கப்படுவதில் முறைகேடுகளை தடுக்க ஆதார் எண்களை வைத்து டிராக்கிங் செய்யவும் கலந்தாய்வை மேற்பார்வையிட 3ஆம் தரப்பு தணிக்கை முறையை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மருத்துவ கல்வி இயக்குநர்களே அதற்கு பொறுப்பு என்றும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


