டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையின் சோதனை நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொழிலதிபர் ரத்தீஷின் வீட்டில் யாரும் இல்லாததால், அந்த வீட்டுக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.
சோதனை நடைபெற்ற 2 நாட்களும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தொழிலதிபர் தேவக்குமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சோதனைக்குள்ளானவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேளாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடம் 8 முறை விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சோதனைக்கு தடைவிதிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ்
மசிஹ் அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, 2014-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை 41 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வரும் வழக்கில் அமலாக்கத் துறை நுழைந்து சோதனை நடத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
அமலாக்கத் துறை விசாரணையின்போது அதிகாரிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர்களது தனியுரிமை பறிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராஜூ, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டார். வழக்கை அமலாக்கத் துறை நியாயமாக விசாரித்து வருவதாகவும் ராஜூ கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தும்போது, இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஏன் விசாரணை செய்ய வேண்டும் என வினவினார். டாஸ்மாக் என்ற ஒரு அரசு நிறுவனத்தின் மீது எப்படி கிரிமினல் குற்றம்சாட்ட முடியும் என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, அமலாக்கத்துறை அனைத்து எல்லைகளையும் கடந்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளதாகவும் காட்டமாக தெரிவித்தார். முறைகேடு நடந்தது என்றால், சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால், ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? என வினவிய தலைமை நீதிபதி, அமலாக்கத்துறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என அமலாக்கத்துறை கூறும் நிலையில், அதற்கான முதன்மை குற்றம் என்ன எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

