பொதுமக்கள் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுச் சேவையை பயன்படுத்துவதுபோலவே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாகவும், சரியான நேரத்திற்கும் செல்ல அதிகம் ஓலா, உபர் போன்ற டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்துவருகிறது.
நிறுவனம் குறிப்பிட்ட தொலைவுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயத்திற்கும் சூழலில், வாகன ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் கேட்கும் நிகழ்வுகளும் நடந்துவருகிறது. சில சமயங்களில் கூடுதல் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே வாகனமே வரும்.
அப்படி வாகனம் வராமல் வாடிக்கையாளர்கள் அதனை ரத்து செய்துவிட்டு, வேறு வாகனத்தை பதிவு செய்தால், ஏற்கனவே பதிவு செய்த வாகனத்தை ரத்து செய்ததற்காக ஒரு குறிப்பிட்ட கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. இப்படியான சூழலில், ரத்து செய்யும்போது அதற்கான காரணத்தை குறிப்பிடும் வசதி நிறுவனங்களின் ஆப்களில் இருந்தாலும், பெரிதாக மக்கள் மத்தியில் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அநேக நேரங்களில் ரத்து செய்ததற்கான கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இது ஒருபக்கம் என்றால், அவசரமாக செல்ல வேண்டும், வாகன வசதி இல்லை எனும் சூழலில் ஓட்டுநர்கள் கேட்கும் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கும் வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில், உபர் நிறுவனம் வாடிக்கையாளர்கள் விரைவாக சேவையை பெற வேண்டும் என்றால் டிப்ஸ் வழங்கலாம் எனும் புதிய விஷயத்தைக் கொண்டுவந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவும் வெளியிட்டுள்ளார்.
The practice of ‘Advance Tip’ is deeply concerning. Forcing or nudging users to pay a tip in advance, for faster service is unethical and exploitative. Such actions fall under unfair trade practices. Tip is given as a token of appreciation not as a matter of right, after the… pic.twitter.com/WaPH26oT9G
— Pralhad Joshi (@JoshiPralhad) May 21, 2025
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உபர் நிறுவனம் விரைவான சேவைக்காக முன்கூட்டியே வாடிக்கையாளர்களிடம் டிப்ஸ் கேட்பது என்பது ஆழ்ந்த கவலைக்குரிய விஷயம். இவ்வாறாக வாடிக்கையாளர்களை உந்துவது என்பது நியாயமற்றது. அதுமட்டுமின்றி இத்தகைய நடவடிக்கைகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளின் கீழ் வருகின்றன. டிப்ஸ் என்பது சேவை முடிந்த பிறகு மன திருப்தியாக இருந்தால் கொடுப்பது. அது உரிமை கிடையாது.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். அதன்படி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், உபர் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களிடத்திலும், நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு ஆகியவை நிலைநிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

