Last Updated:
Corona Virus | சிங்கப்பூர், தாய்லாந்தில் மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்பின் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாதம் முதல் வாரத்தில் 14 ஆயிரத்து 200 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தாய்லாந்தில் சாங்ரான் திருவிழாவைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தமாக 257 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும், மகாராஷ்டிராவில் 56 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 13 பேருக்கும், புதுச்சேரியில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி உட்பட இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 59 வயதான பெண்மணி புற்றுநோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததும், 14 வயது சிறுமி சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவுடன் மத்திய சுகாதார சேவைகள் துறை இயக்குநர் அவசர ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக நிலைமையை சுகாதார அமைச்சகம் கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
மருத்துவர் அமலோற்பவநாதன் அட்வைஸ்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், வீரியத்துடன் கூடிய வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர் அமலோற்பவநாதன் தெரிவித்தார்.
கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் கருவுற்ற பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் அமலோற்பவநாதன் அறிவுறுத்தினார்.
Delhi,Delhi,Delhi
May 20, 2025 11:05 AM IST


