Last Updated:
இந்த இணையை பிரிப்பதற்கு கேப்டன் டெல்லி கேப்டன் அக்ஷர் படேல் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகியோர் களம் இறங்கினர். டூப்ளசிஸ் 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தபோது அர்ஷத் கான் வீசிய பந்தில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த அபிஷேக் போரல் மற்றும் கே. எல். ராகுல் இணை அணியை தொடக்க சரிவிலிருந்து மீட்டெடுத்தது.
இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அபிஷேக் போரில் 19 பந்துகளில் மூன்று சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் அக்ஷர் படேல் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே. எல். ராகுல் 65 பந்துகளில் 4 சிக்ஸர் 14 பவுண்டரியுடன் 112 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை இருவரும் வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இந்த இணையை பிரிப்பதற்கு கேப்டன் டெல்லி கேப்டன் அக்ஷர் படேல் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. பந்துவீச்சாளர்களை அடிக்கடி மாற்றிய நிலையிலும் விக்கெட் விழாத சூழல் ஏற்பட்டது.
சிக்சரும் பவுண்டரியும் விளாசிய சாய் சுதர்சன் சதம் அடித்து குஜராத் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்களும், சுப்மன் கில் 93 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
May 18, 2025 11:12 PM IST

