Last Updated:
இந்திய ராணுவம் ஒடிசாவில் ‘பார்கவாஸ்த்ரா’ டிரோன் எதிர் அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது. இது 2.5 கி.மீ தூரத்தில் டிரோன்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தான் அதிகளவிலான டிரோன்களை இந்தியா மீது செலுத்தி தனது தாக்குதலை நடத்தியது. ஆனால், இந்தியா இதனை நம் வான்பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு தகர்த்து எறிந்தது. இதில் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட S 400 பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைகளும் இந்தத் தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்பாற்றின.
உலகில் தற்போது இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தால், முதலில் டிரோன்கள் கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், டிரோன்களை வானிலேயே தாக்கி அழிக்கும் கட்டமைப்புகளை நாடுகள் வளர்த்துவருகின்றன. அந்த வகையில், இந்தியா தற்போது டிரோன்களை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ‘பார்கவாஸ்த்ரா’ அமைப்பை உருவாக்கியுள்ளது.
குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘பார்கவாஸ்த்ரா’ டிரோன் எதிர் அமைப்பு நேற்று ஒடிசாவில் உள்ள கோபால்பூர் சோதனை மையத்தில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ விமான பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சோதனை நேற்று (13ஆம் தேதி) நடத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று முதல் நான்கு ராக்கெட்கள் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் வெற்றிகரமாக இருந்தது என்றும் இந்திய ராணுவம் இன்று அறிவித்துள்ளது.
இந்தச் சோதனையில், தனித்தனியே டிரோன்களை அழிக்கும் சோதனையும், குழுவாக டிரோன்களை அழிக்கும் சோதனையும் மேற்கொண்டதாகவும், அதிலும், இரண்டு வினாடிகளில் எதிர் டிரோன்களை கச்சிதமாக இலக்கு வைத்து அழிக்கும் சோதனை வெற்றி பெற்றதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்கவரும் சிறியவகை டிரோன்களை 2.5 கி.மீ தூரத்திலேயே கண்டறிந்து துல்லியமாகத் தாக்கும் வகையில் இந்த ‘பார்கவாஸ்த்ரா’ வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது சோதனையில் வெற்றி அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Odisha (Orissa)


