Last Updated:
பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது பல் துலக்க அனுமதிக்கவில்லை என பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது பல் துலக்க அனுமதிக்கவில்லை என மீண்டு வந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தெரிவித்துள்ளார்.
மூன்று வார பாகிஸ்தான் தடுப்புக்காவலில் இருந்த பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷாவை, தூங்கவோ, பல் துலக்கவோ அனுமதிக்காமல் கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாளான ஏப்ரல் 23ஆம் தேதி, இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, வழிதவறி பாகிஸ்தான் எல்லையை தாண்டிச் சென்றதால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்தியா- பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டதால் அவரை ஒப்படைக்கும் நிகழ்வு தள்ளிப்போனது. இதையடுத்து, இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டதை அடுத்து, 20 நாட்களுக்குப் பிறகு பூர்ணம் குமாரை விடுதலை செய்த பாகிஸ்தான் ராணுவம், அட்டாரி – வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் மூன்று வெவ்வேறு இடங்களுக்கு தான் மாற்றப்பட்டதாகவும், தடுப்புக்காவலில் இருந்தபோது குளிக்க விடாததுடன் பல் துலக்க அனுமதிக்கவில்லை என்று பூர்ணம் குமார் கூறியுள்ளார்.
உடல் ரீதியான சித்திரவைக்கு ஆளாகவில்லை என்றாலும், தூக்கமின்மை போன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் மன அழுத்தத்திற்கு அவர் ஆளானதாக கூறப்படுகிறது. மூன்று வார சிறைப்பிடிப்பில் அனுபவித்த மன அதிர்ச்சியிலிருந்து அவரை வெளியே கொண்டு வருவதற்கான சிகிச்சை இன்னும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
May 17, 2025 10:48 AM IST


