Last Updated:
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை பிசிசிஐ இன்று தேர்வு செய்ய உள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனை பிசிசிஐ இன்று இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, சீனியர் வீரர்கள் கோலி, அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதேபோன்று விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு சரியான மாற்று வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு பிசிசிஐ தற்போது தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை பிசிசிஐ இன்று இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீரருடன் பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்த உள்ளது. பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடனும் கம்பீர் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் என்று தமிழக வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் – கவாஸ்கர் தொடரில் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியும் அடைந்தது. ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், பும்ரா கேப்டன் பொறுப்பை நிராகரித்துவிட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


