Last Updated:
கர்நாடகாவில் எட்டாம் வகுப்பு மாணவரை, ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் 14 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் 8 மற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வந்ததால் நெருக்கமாக பழகியுள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த போது 5 ரூபாய் மதிப்பிலான நொறுக்குத் தீனியை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியை எடுத்து வந்து, எட்டாம் வகுப்பு மாணவரை கண்மூடித்தனமாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். என்ன நடந்தது என்று தெரியாமல் சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத்தது, அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறாம் வகுப்பு மாணவரை கைது செய்தனர்.
அப்போது, சீனியர் மாணவரை கொலை செய்துவிட்டோம் என்பது கூட தெரியாமல், அந்த சிறுவன் போலீசாருடன் செல்ல மறுத்து அடம் பிடித்தார். பின்னர், வலுக்கட்டாயமாக அவரை அழைத்துச் சென்ற போலீசார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இதுகுறித்து நேரில் விசாரணை மேற்கொண்ட ஹூப்ளி காவல் ஆணையர் சசி குமார், உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், பேசிய அவர் சிறு சண்டைக்கே கத்தியை எடுத்து குத்த வேண்டும் என்று, 12 வயது சிறுவன் நினைக்கும் மனநிலை என்பது துரதிர்ஷ்டவசமான என கவலை தெரிவித்துள்ளார்.
சினிமா, டிவி மற்றும் செல்போனில் பார்க்கும் வன்முறை காட்சிகளே இதுபோன்ற சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார். எனவே, ஆபத்தை உணர்ந்து குழந்தைகள் மத்தியில் பெற்றோர் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வெறும் ஐந்து ரூபாய் தின்பண்டத்திற்காக எட்டாம் வகுப்பு மாணவரை, ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
May 15, 2025 11:01 AM IST


