Last Updated:
காங்கிரஸ் கட்சி, ஆபரேசன் சிந்தூர் திட்டத்தை பாஜக அரசியலாக்குவதாக குற்றம் சாட்டி, 10 முதல் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்து’ பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆபரேசன் சிந்தூர் திட்டத்தை பாஜக அரசியலாக்குவதாகக் கூறி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஜெய் ஹிந்து பேரணி நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் போர் பதற்றம் நிலவியது. இந்திய ராணுவத்தின் பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை காரணமாகவே முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார். சண்டையை நிறுத்தவில்லை என்றால் இரு நாடுகள் உடனான வர்த்தகம் நிறத்தப்படும் என்று எச்சரித்தேன். அதன்பின்பே இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் செய்தன என்று தெரிவித்தார். இந்திய தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்த போதும் சண்டை நிறுத்தத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என பிரதமர் மோடியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ இதுவரை பதிலளிக்கவில்லை என்று விமர்சித்தார்.
இதனைக் கண்டித்து நாடு முழுவதும் 10 முதல் 15 மாநிலங்களில் ’ஜெய் ஹிந்து’ பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதில், பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாஜக கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களை பிரதமர் மோடி வரும் 25 ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகக் கூறிய ஜெய்ராம் ரமேஷ், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில முதலமைச்சர்கள் என்ன தவறு செய்தார்கள் என்றும் வினவினார்.
சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் அறிவித்தது குறித்து பிரதமர் பதிலளிக்காதது ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி


