Last Updated:
பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்ற துருக்கி சுற்றுலாவுக்கான சலுகைகளையும், விளம்பரங்களையும் எங்கள் தளத்தில் இருந்து நீக்கியிருக்கிறோம் என Make My Trip தெரிவித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ஆபரேஷனை பாகிஸ்தான் மீது நடத்தியது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் உறவு மேலும் பலவீனம் அடைந்தது. தற்போது ஆபரேஷன் சிந்தூர் காரணமாக, துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாட்டு உறவும் கூட பலவீனம் அடைய ஆரம்பித்துள்ளதோ என தோன்றும் அளவிற்கு இணையத்தில் இரு நாட்டையும் இந்தியர்கள் புறக்கணிக்கவும் என டிரண்ட் ஆகிவருகிறது. இதற்கு இந்திய வணிகர்களும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் கூட தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை உலகம் முழுவதும் கண்டித்து வந்த நிலையில், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது மட்டுமல்லாமல், இந்தியாவின் இராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைக்க துருக்கிய சோங்கர் ட்ரோன்களும் பாகிஸ்தான் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது துருக்கியை இந்தியர்கள் புறக்கணிக்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
மேலும், இது துருக்கிய தயாரிப்புகளையும், துருக்கி பயணத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைக்கும் தற்போது சென்றுள்ளது. துருக்கி ஆப்பிள்கள் இந்தியச் சந்தைகளில் விற்பது வழக்கமானது. ஆனால், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து துருக்கி ஆப்பிள்களை வணிகர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தனது பதிவில், “இந்தியர்களின் சுற்றுலாவால், கடந்த ஆண்டு துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளும் ரூ. 4000 கோடிக்கும் மேலாக பெற்றது. இதனால், அவர்களின் வேலைவாய்ப்பு, சுற்றுலா, பொருளாதாரம், ஹோட்டல்கள், விமானங்கள் ஆகியவையும் கூட பலன் அடைந்தன. இன்று, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இருவரும் பாகிஸ்தானுடன் நிற்கிறார்கள். இந்தியாவிலும் உலகிலும் ஏராளமான அழகான இடங்கள் உள்ளன. தயவுசெய்து இந்த 2 இடங்களைத் தவிர்க்கவும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேக் மை ட்ரிப் (Make My Trip) நிறுவனம், கடந்த ஒரு வாரமாக அஜர்பைஜான் மற்றும் துருக்கிக்கான முன்பதிவுகள் 60% குறைந்துள்ளன. அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் பயணிக்க திட்டமிட்டவர்கள் ரத்துசெய்வது 250% ஆக அதிகரித்துள்ளது. தேசத்தின் ஒற்றுமையையும், பாதுகாப்பு படையினர் மீதான மரியாதையின் காரணமாகவும், நாங்கள் இதனை முழுமையாக ஆதரிக்கிறோம்.
துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளுக்கும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே இரு நாடுகளுக்குமான சுற்றுலாவுக்கான சலுகைகளையும், விளம்பரங்களையும் எங்கள் தளத்தில் இருந்து நீக்கியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
எளிதான விசாக்கள் மற்றும் நேரடி விமானங்கள் மூலம் 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 5 கோடி இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த இரண்டு நாடுகளுக்கும் பயணம் செய்தனர். 2023 இல் துருக்கி பூகம்பத்தால் பெரும் சேதத்தைச் சந்திந்து பாதிக்கப்பட்டபோது, அந்நாட்டிற்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் தோஸ்த்’ தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு துருக்கியை புறக்கணிக்கும் இந்தியர்கள்… Make My Trip வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


