பிறை, தாமான் இந்திரவாசியில் மின் கேபிள்களை சேமித்து வைத்திருந்த ஒரு கிடங்கு நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது. 12 மணி நேர முழுமையான அணைக்கும் பணிகளுக்குப் பிறகும், தீயணைப்புத் துறை இன்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பினாங்கு தீயணைப்பு மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறுகையில், நேற்று மாலை 6.59 மணிக்கு தீ விபத்து குறித்து JBPM-க்கு அழைப்பு வந்ததாகவும், பெராய் தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து (BBP) முதல் தீயணைப்பு இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவித்தார்.
தீ 2,400 சதுர அடி பரப்பளவு கொண்ட மின் கேபிள் கிடங்கை சூழ்ந்துள்ளது. தீயணைப்பு படையினர் வந்தபோது தீ ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இரண்டு மாடி கட்டிடத்தின் 90 விழுக்காடு தீயில் எரிந்து நாசமானது. இரவு 7.59 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கட்டிடத்தின் தரை கூரை இடிந்து விழுந்ததால் காலை 8.30 மணி வரை அந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஜாலான் பேராக், பண்டார் பெர்டா, சுங்கை பாக்காப் பட்டர்வொர்த் தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டதாகவும், 11 தன்னார்வ தீயணைப்புப் படையினரின் உதவியை நாடியதாகவும் அவர் கூறினார்.


