இத்தகைய செயலால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “எதற்காக அமெரிக்கா இதில் தலையிட்டது? மோதல் நிறுத்தத்தை இந்திய பிரதமர் அறிவிக்காமல் எப்படி ட்ரம்ப் அறிவித்தார்?” என்று கேள்வியெழுப்பின.
பின்னர், இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றப் போகிறார் என மே 12-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

அடுத்த சில மணிநேரங்களில், “பாகிஸ்தானும் இந்தியாவும் மோதலை நிறுத்தவில்லையெனில் இரு நாடுகளுடனும் வர்த்தகம் கிடையாது என நான் விடுத்த எச்சரிக்கையால்தான், இரு நாடுகளும் உடனே சமாதான ஒப்பந்தத்துக்கு முன்வந்தன” என்று ட்ரம்ப் வெளிப்படையாகப் போட்டுடைத்தார்.
பிறகு, நாட்டு மக்களுக்கான தனது உரையில், ட்ரம்பின் இத்தகைய பேச்சு குறித்து மோடி எந்த விளக்கமும் தரவில்லை. இதுவரையில், மத்திய அரசு தரப்பிலிருந்தும் அமெரிக்காவின் தலையீடு குறித்து எந்த அறிக்கையும் வரவில்லை.

