அதற்கேற்றாற்போலவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் கிடையாது என எச்சரித்ததால் இருநாடுகளும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக மே 12-ம் தேதி ட்ரம்ப் வெளிப்படையாகப் பேசினார்.
ட்ரம்ப் அதோடு நிற்காமல் நேற்று (மே 13) சவுதி அரேபியாவிலும், “இந்திய – பாகிஸ்தான் இடையே அதிகரித்த மோதலைத் தடுக்க வர்த்தகத்தைப் பெருமளவில் நான் பயன்படுத்தினேன். ஒரு டீல் போடுவோம், சில வர்த்தகம் செய்வோம் என்று சொன்னேன் மோதல் எல்லாம் நிறுத்தப்பட்டது” என்று கூறினார்.
பிரதமர் மோடியும், ட்ரம்பின் இத்தகைய பேச்சு குறித்து எதுவும் வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் மோதல் நிறுத்த விவகாரத்தில் முதல்முறையாக ட்ரம்பின் கூற்றை மேலோட்டமாக மறுக்கும் வகையில், “ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்னையையும், இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்கும் என்ற நீண்டகால தேசிய நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது.
அந்தக் கொள்கையில் எதுவும் மாறவில்லை. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை விடுவிப்பதே இதில் நிலுவையிலிருக்கும் விஷயம்.

மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதிலிருந்து மே 10-ம் தேதி ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது வரை, அதிகரித்து வரும் ராணுவ நிலைமை குறித்து இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே உரையாடல்கள் நடந்தன.
இந்தப் பேச்சுவார்த்தை எதிலும் வர்த்தக விவகாரம் வரவில்லை.” என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

