Last Updated:
பஞ்சாப் போலீசார், இந்தியாவில் உளவு பார்த்ததாக இருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்திய அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ராஜாங்க ரீதியாக பாகிஸ்தான் மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டது. பின் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால், போர் பதற்றம் ஏற்பட்டது. பின் இரு நாட்டின் இடையேயும் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் பாகிஸ்தான் ஊழியரை வெளியேறுமாறு இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அவர் 24 மணி நேரத்திற்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பஞ்சாப் காவல்துறை வேவு பார்த்ததாக இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்கள் இருவரும், டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இதில், ஒருவர் இந்திய ராணுவம் தொடர்பான தரவுகளை வெளியே கசியவிட்டார் என்றும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். இதற்காக இவர்கள் இருவருக்கும் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.


