Last Updated:
சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கை கொடுக்கவில்லை என முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் அழிக்கப்பட்டன. அதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் சண்டை 3 நாட்களாக தீவிரமாக இருந்து வந்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கேட்டு கொண்டதன் பெயரில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொண்டன.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற தாக்குதல் மற்றும் தாக்குதல் முறியடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களை சந்திப்பில் முப்படைகளின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது பேசிய விமானப் படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, தீவிரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்னையாக மாற்றுகிறது என்றும் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளின் விவகாரத்தில் தலையிட்டது பரிதாபத்துக்குரியது என்றும் விமர்சித்தார்.
மேலும் இந்தியாவின் தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல என்றும் தீவிரவாதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இந்தியாவின் பன்னடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானால் ஊடுருவ முடியவில்லை எனக் கூறிய ஏ.கே.பாரதி, இந்த தாக்குதல் நடவடிக்கை எலி-பூனை விளையாட்டு போன்றது என்றும் இருப்பினும் விழிப்புடன் இருந்து வென்றதாகவும் கூறினார்.
சீனா தயாரித்த ஏவுகணைகளை இந்திய படைகள் சிதறடித்ததாக தெரிவித்தார். சீனாவின் ஏவுகணைகளைதான் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது, சீனாவில் உருவாக்கப்பட்ட ட்ரோன்களையும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை பாகங்கள் நம்மிடம் உள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
இந்தியாவுக்குள் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களையும் பாகிஸ்தான் அனுப்பியதாகவும் துருக்கி மட்டுமல்ல எந்த நாட்டு டிரோன்களை கொண்டு தாக்கினாலும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடிக்கும் என்றும் கூறினார்.
May 12, 2025 10:00 PM IST


