Last Updated:
இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மீதும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா.
இந்த நிலையில், இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி பிசிசிஐ-ஐ சுழன்றடித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பும்ரா, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். 2 போட்டிகளில் ரோஹித் விளையாடாத சமயத்தில் அவர்தான் அணியை வழிநடத்தினார். அதனால் புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அண்மையில் தான் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால், அவரது பணிச்சுமையை சீராக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு உள்ளது. இதனால் இளம் வீரரான ஷுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவியை தர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளை கவனத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளதாக தெரிகிறது. இதேபோல் துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

