Last Updated:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா, அந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது. இதையடுத்து மே 8 மற்றும் 9 தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கிய நிலையில், S-400 மற்றும் ஆகாஷ் போன்ற கவசமுறைகளால் இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடம் முதல்முறையாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட நிலையில், இந்த தாக்குதல் மேலும் தீவிரமடைந்தால், பாகிஸ்தானில் பாதிப்புகளும் அதிகரிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியாவிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் அறிவார்ந்த செயலுக்கு எனது பாராட்டுக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
சில மணிநேரங்களுக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்கள் போருக்கு சமம் என பேசியிருந்த நிலையில் டிரம்ப்பின் அறிவிப்பு கவனம் பெறுகிறது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
சில மணிநேரம் முன் மோடி பேசிய வார்த்தைகள்.. “இந்தியா – பாக். சண்டையை நிறுத்த ஒப்புதல்” – டிரம்ப் அறிவிப்பு என்ன?


