Last Updated:
இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்ட நிலையில், பாகிஸ்தான் தனது வான்வெளியை மீண்டும் திறந்துள்ளது. இரு நாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்ட நிலையில், பாகிஸ்தான் எடுத்த முதல் நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா, அந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது. இதையடுத்து மே 8 மற்றும் 9 தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கிய நிலையில், S-400 மற்றும் ஆகாஷ் போன்ற கவசமுறைகளால் இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடம் முதல்முறையாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட நிலையில், இந்த தாக்குதல் மேலும் தீவிரமடைந்தால், பாகிஸ்தானில் பாதிப்புகளும் அதிகரிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியாவிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் அறிவார்ந்த செயலுக்கு எனது பாராட்டுக்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல் இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய இராணுவ ஜெனரலை அழைத்தார். அப்போது இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் தரைவழி, வான்வழி, கடல் வழி தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இருநாடுகள் இடையேயான துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனை இருதரப்பிலும் உடனே செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளின் ராணுவ ஜெனரல்களும் வருகிற மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று பேசினார்.
இதற்கிடையே, இந்தியாவுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தான் வான்வெளியை மீண்டும் திறந்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) வெளியிட்ட அறிவிப்பில், “பாகிஸ்தானின் வான்வெளி அனைத்து வகையான விமானங்களுக்கும் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. இதனால் இந்திய விமான நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி நஷ்டத்துக்கு ஆளாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi
சண்டையை நிறுத்திய அடுத்த நொடி.. இந்தியாவுக்காக பாகிஸ்தான் எடுத்த முதல் நடவடிக்கை.. வெளியான அறிவிப்பு!


