Last Updated:
பிஎஸ்எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்ததால், மீதமுள்ள 8 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லையோர மாநிலங்களான ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் உள்ள எல்லை கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானம் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல் தொடருக்கு இடையூறு செய்வதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நக்வி, இதனால், இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் இன்னும் 8 போட்டிகள், ராவல்பிண்டி, முல்தான், லாகூரில் நடைபெற இருந்த நிலையில் இவை அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார். பிஎஸ்எல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களின் மனநலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) விடுத்த கோரிக்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிரிக்கெட் அமைப்பான எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் நிராகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அப்படியான அறிவிப்பு வெளியானால், அதன் T20 லீக்கின் இரண்டாம் பாதி மேற்கிந்திய நாட்டில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள PCB-க்கு அது பெரும் அடியாக இருக்கும்.
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திலிருந்து எழும் பாதுகாப்பு கவலைகள், பிசிபியின் கூட்டாளியாகக் கருதப்படுவது குறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பிஎஸ்எல்லை நடத்துவது பரிந்துரைக்கக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.’
மேலும், இத்தகைய பதட்டமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பிஎஸ்எல் போன்ற போட்டியை நடத்துவது நல்லிணக்கத்தைக் கெடுக்கும், பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் மற்றும் சமூகங்களுக்கு இடையே தேவையற்ற உராய்வைத் தூண்டும் என்று வட்டாரங்கள் பேசப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மீதமிருக்கும் 8 போட்டிகளையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர், “இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சூழ்நிலை மோசமாக இருப்பதால், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவிப்பின்படி, போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


